திமுக தலைவர் பதவி: நான் கனவு கூட கண்டதில்லை-வைகோ
சென்னை: திமுகவின் தலைவர் பதவியை அடைய வேண்டும் என்று நான் கனவு கூட கண்டதில்லை. அப்படி ஒருபோதும் நான் எண்ணியதும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தலைவர் பதவிக்கு குறி வைத்த தம்பி என்ற பெயரில் முதல்வர் கருணாநிதி நேற்று ஒரு கவிதை எழுதியிருந்தார். அதில் அவர் தம்பி என்று கூறியிருந்தது வைகோவைத்தான் என்பது சொல்லாமலேயே தெரியும்.
இந்த நிலையில் அந்தக் கவிதைக்கு வைகோ பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை ..
அந்தநாள் ஞாபகம் வந்தது என்றும், கட்சி தலைமையை கைப்பற்றும் நோக்கத்தில், தான் பெயர் சொல்ல விரும்பாத, குட்டை மனப் பேராசை கொண்ட ஒருவர் செயல்பட்டது தெரிந்தது என்றும், கவிதை கடிதம் என்ற பெயரில் முதல்வர் கருணாநிதி என்னை தாக்கி உள்ளார்.
கட்சியின் தலைமைப் பதவி என்பதை நான் கனவிலும் எண்ணியது இல்லை. கற்பனையிலும் கூடக் கருதியது இல்லை. என் மீது சுமத்தப்பட்ட கொடும்பழியால் வேதனையில் கொதித்த திமுக தோழர்கள் ஐவர் தீக்குளித்து மடிந்தார்கள்.
கடந்த 15 ஆண்டுகளில், மதிமுகவை சிதைப்பதற்கும், அழிப்பதற்கும் அவர் எடுத்துக்கொண்ட பல முயற்சிகளும் பலன் அளிக்காமல் போனது. கடைசியாக மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரை துரோகிகள் ஆக்கி தன்னோடு சேர்த்துக்கொண்ட பின், மதிமுகவை எந்த விதத்திலாவது நிர்மூலம் செய்து விட வேண்டும் என்று எண்ணி, 15 ஆண்டுகளுக்கு முன்பு என்மீது சுமத்திய கொடும்பழியை நியாயப்படுத்த முனைந்துதான் கவிதையை எழுதி இருக்கிறார்.
இப்போது என் மீது சுமத்தப்படும் நிந்தையும் பழியும், பெரிய பதவியில் இருப்பவர் என்னையும் எங்கள் இயக்கத்தையும் அழிப்பதற்காகவே ஏவி உள்ளார் என்பதை தமிழக மக்களுக்கு தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications