கு.ப.கிருஷ்ணன்: தேமுதிக to மீண்டும் அதிமுக

ஜெயலலிதா தலைமையிலான முதல் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர் கு.ப.கிருஷ்ணன். அதிமுக ஆட்சியை இழந்த பின்னர் ஜெயலலிதாவைப் போலவே இவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கினார்.
வருமானத்தை மீறி ரூ. 3.72 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக இவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந் நிலையில் அதிமுகவிலும் ஒதுக்கப்படவே அதிலிருந்து விலகி தமிழர் பூமி என்ற கட்சியை ஆரம்பித்தார். வெறும் லெட்டர் பேட் கட்சியாகவே இருந்த தமிழர் பூமியை கலைத்துவிட்டு கடந்த 2006ம் ஆண்டில் தேமுதிகவில் இணைந்தார்.
அவருக்கு மாநில துணைப் பொது செயலாளர் பொறுப்பு வழங்கிய விஜய்காந்த் அத்தோடு அவரை மறந்தும் போனார். இப்போது திருச்சி அல்லது கரூர் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டுப் பார்த்தார் கு.ப.
ஆனால், சீட் எல்லாம் கிடையாது என்று கூறிவிட்டார் விஜய்காந்த். இதையடுத்து தேமுதிகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளார் கு.ப.கிருஷ்ணன்.
இதற்காக இன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்கிறார்.
அவரை அதிமுக தலைமையே மீண்டும் கட்சிக்குள் இழுத்ததாகவும் பேசப்படுகிறது. தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள் கு.ப. ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications