டெல்லியில் இருந்து நியூயார்க்கிற்கு தினசரி விமானம்- ஏர் இந்தியா
பிராங்க்பர்ட்: டெல்லி மற்றும் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்க்பர்ட் வழியாக முறையே நியூயார்க் மற்றும் சிகாகோவுக்கு தினசரி விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
டெல்லி மற்றும் மும்பையில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் சிகாகோ நகரங்களுக்கு பிராங்க்பர்ட் நகரம் வழியாக ஏர் இந்திய நிறுவனம் வாரத்துக்கு இரண்டு விமானங்களை இயக்கி வந்தது.
தற்போது அதை தினசரி விமானமாக மாற்றியுள்ளது. இதன் மூலம் பிராங்க்பர்ட்டில் ஒரு வாரத்தில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
விரைவில் இந்நிறுவனம் அகமதாபாத்தில் இருந்து பிராங்கபர்ட்டுக்கு தினசரி விமானம் ஒன்றை இயக்கவும் திட்டமிட்டுள்ளது.
ஏர் இந்தியாவின் முதல் கோடைக்கால விமான சேவை மும்பை, டெல்லியிலிருந்து கடந்த சனிக்கிழமை புறப்பட்டு நேற்று முன்தினம் பிராங்க்பர்ட் விமான நிலையத்தை அடைந்தது. அங்கிருந்து நியூயார்க் மற்றும் சிகாகோ நகரங்களுக்குச் சென்றது.
இது குறித்து மத்திய ஐரோப்பாவுக்கான ஏர் இந்தியா மேலாளர் ரத்தன் பாலி கூறுகையில்,
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், அவர்களுக்கு உதவும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா, ஜெர்மனி இடையே வாரத்துக்கு 69 விமான சேவைகளை இயக்குவது லாபகரமாக இருக்கும் என நாங்கள் எடுத்த ஆய்வு ஒன்றில் தெரியவந்தது. இதையடுத்து இம்முடிவுக்கு வந்தோம்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடையே விமானங்களை இணைப்பதற்கேற்ப விமானங்களை ஏர் இந்தியாவும், லுப்தான்சாவும் திறம்பட இயக்கி வருகின்றன. இதன் மூலம் ஐரோப்பிய நாடுகளில் மிகச் சிறந்த விமான நிறுவனமாக ஏர் இந்தியா விளங்க வழியேற்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பொருளாதார பின்னடைவில் இருந்து நிறுவனத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயத்தில் கொச்சி, பெங்களூர், சென்னை, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கும் புதிய விமான சேவையை துவக்கவுள்ளோம். இது உள்ளூர் பயணிகளுக்கும், வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் உதவிகரமாக இருக்கும் என்றார் ரத்தன் பாலி.












Click it and Unblock the Notifications