இடைத் தேர்தல்களே வேண்டாமே!
- பி.ஜி.மகேஷ்
பெங்களூர்: இந்தியாவில் இடைத் தேர்தல் என்ற முறையேய ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சமீபத்தில் கர்நாடகத்தில் நடந்த கூத்துக்களைப் பார்த்துதான் இந்த கோரிக்கை வலுத்துள்ளது. ஆனால் நெடு நாட்களாகவே இடைத் தேர்தல் என்பதே தேவையற்றது என்ற கருத்தை பல அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.
குறிப்பாக தமிழகத்தில் பாமக இந்தக் கருத்தை நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறது. இடைத் தேர்தலால் மக்கள் வரிப்பணம்தான் தேவையில்லாமல் செலவாகிறது. பணத்தைக் கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கி விடுகிறார்கள். எனவே இடைத் தேர்தல் என்ற முறையையே ஒழிக்க வேண்டும் என்பது பாமகவின் கருத்து.
கர்நாடகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளத்திலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த தொகுதிகளில் இடைத் தேர்தல் நடந்தது.
ஆனால் இந்தத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா ரூ. 25 கோடி வரை செலவிடப்பட்டதாக ஒரு கணக்கு கூறுகிறது. ஆனால் சட்டசபைத் தேர்தல்களில் ஒரு வேட்பாளர் அதிகபட்சம் ரூ. 25 லட்சம் வரை தான் செலவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே ஒன்று, சட்டசபைத் தேர்தலில் வேட்பாளர்கள் செலவிடக் கூடிய தொகையை ரூ. 25 கோடியாக உயர்த்தி விட வேண்டும். அல்லது இடைத் தேர்தல்களை தடை செய்து விட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் (தேர்தல் 2009) பிரபலமான தொகுதிகளை வெல்வதற்காக முக்கிய அரசியல் கட்சிகள் தலா ரூ. 50 கோடி வரை செலவிடக் கூடும் என்று குத்துமதிப்பாக கணிக்கப்பட்டுள்ளது.
எனவே வரும் காலத்தில் இடைத் தேர்தல்களை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும். ஒருவேளை ஏதாவது ஒரு தொகுதியில் உறுப்பினர் ராஜினாமா செய்தாலோ அல்லது மரணமடைந்தாலோ, பொதுத் தேர்தலி்ல் 2வது இடம் பிடித்த வேட்பாளரை வெற்றி பெற்றவராக அறிவித்து அவரை எம்.எல்.ஏ. அல்லது எம்.பி ஆக அறிவிக்க வேண்டும்.
இதை இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால், ஒரு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்று வைத்துக் கொள்வோம். அந்த உறுப்பினர் ராஜினாமா செய்து விட்டார். அதன் பின்னர், அத்தொகுதியில் 2வது இடம் பிடித்த நபர் பாஜகவைச் சேர்ந்தவராக இருந்தால், அவரை வெற்றியாளராக அறிவிக்க வேண்டும்.
அதேபோல ஒரே நபர் பல தொகுதிகளில் நிற்பதையும் தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும். ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும் என விதியை உருவாக்க வேண்டும்.
சிலர் இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெல்வார்கள். பின்னர் ஒரு சீட்டை ராஜினாமா செய்வார்கள். இதனால் அங்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டி வருகிறது. இதனால் அரசுக்கு தேவையி்ல்லாமல் சில கோடிகள் செலவாகிறது.
இதற்குப் பதில் அவ்வாறு ராஜினாமா செய்வோரின் தொகுதிகளில் 2வது இடத்தைப் பிடித்தவரை வெற்றி பெற்றவராக அறிவித்து விடலாம். இப்படி அறிவித்தால், ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட எல்லோருமே ஒருமுறைக்கு இரண்டு முறை யோசிப்பார்கள்.
சில மாநிலங்களில் எம்.எல்.ஏக்களாக இருப்பவர்கள் எம்.பி தேர்தலில் நிற்பதைப் பார்க்கலாம். அப்படி போட்டியிடுபவர்கள் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறார்கள்.
இதனால் அங்கும் தேவையில்லாமல்இடைத் தேர்தல் நடத்த வேண்டி வருகிறது. இதைத் தடுக்க எம்.எல்.ஏக்களாக இருப்பவர்கள் எம்.பி. தேர்தலில் போட்டியிடக் கூடாது என தடை விதிக்க வேண்டும்.
அப்படிச் செய்ய முடியாவிட்டால், ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ தொகுதியில் 2வது இடம் பிடித்தவரை வெற்றியாளராக அறிவித்து விடலாம்.
இந்தியாவில் ஒருவர் மத்திய அமைச்சராக வேண்டும் என்றால் லோக்சபா எம்.பி. ஆகவோ அல்லது ராஜ்யசபா எம்.பி ஆகவோ இருக்க வேண்டும்.
ஆனால் அமெரிக்காவில் இது நேர் மாறாக இருக்கிறது. அங்கு அமைச்சராக உள்ள யாருமே செனட் உறுப்பினராக இருப்பதில்லை.
ஹில்லாரி கிளிண்டன், வெளியுறவு அமைச்சர் பதவியை ஏற்பதற்கு முன்பு தனது நியூயார்க் செனட் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அது காலியானது. இந்த இடத்தை நிரப்பும் அதிகாரம், நியூயார்க் மாகாண ஆளுநர் டேவிட் பேட்டர்சனுக்கு இருந்தது.
எனவே இதேபோன்ற விதிமுறை இந்தியாவிலும் இருந்தால், ஒரு மாநிலத்தில் ஏதாவது ஒரு எம்.பி இடம் காலியானால் அதை நிரப்பும் அதிகாரம் அந்த மாநில ஆளுநருக்கு கிடைக்கும்.
மக்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மனதில் கொண்டு இந்த அதிரடி மாற்றங்களை தேர்தல் ஆணையம் துணிகரமாக யோசிக்க முன்வர வேண்டும்.
இது பொருளாதார சீர்குலைவைத் தடுக்க யோசிக்கும் காலம். அந்த வகையில் தேர்தல் ஆணையமும் இடைத் தேர்தல் என்ற பெயரில் வீண் செலவீனங்களுக்கு வழி வகுக்கும் செயல்களுக்கு முடிவு கட்ட முன்வர வேண்டும்.












Click it and Unblock the Notifications