வெல்லும் இடங்கள் குறையும்: இடதுசாரிகள் அச்சம்!
டெல்லி: 14வது லோக்சபாவில் இருந்ததை விட 15வது லோக்சபாவில் இடதுசாரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
கடந்த லோக்சபாவில் இடதுசாரிகளின் எண்ணிக்கை 61 ஆக இருந்தது. ஆனால் இந்த முறை அது 48 ஆக குறையக் கூடும் என அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் தன்னை சந்தித்த ஐரோப்பிய யூனியன் இடதுசாரி குழுவினரும் இத்தகவலை அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் 40 சீட்களுக்குக் கீழ் நிலைமை போகாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 45 சீட் வரை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளதாம்.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பர்தான், வருகிற லோக்சபா தேர்தலில் இடதுசாரிகளுக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என்று கூறியிருந்தார்.
இருப்பினும் தொண்டர்கள் மத்தியில் இந்த எண் கணக்கு எதிர்பார்ப்பு சோர்வை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதால் அதை வெளிப்படையாக சொல்லாமல் உள்ளனராம் இடதுசாரி தலைவர்கள்.
மேற்கு வங்கத்தில் இந்த முறை எதிர்பார்க்கும் அளவுக்கு சீட்கள் கிடைக்காது என்ற அச்சத்தில் உள்ளனர் இடதுசாரிகள். அங்கு மொத்தம் 25 சீட் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில் 8 சீட்களும், தமிழகத்தில் ஐந்து சீட்களும் கிடைக்கும் என்பது அவர்களது கணக்கு. ஆந்திரா, திரிபுராவில் தலா 2 சீட்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.
ஆந்திராவில் தெலுங்கு தேசத்துடன் இணைந்து இடதுசாரிகள் தேர்தலைச் சந்திக்கின்றனர். எனவே நாயுடு மேஜிக் தங்களுக்குக் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
தமிழகத்தில் அதிமுகவுடன் இடதுசாரிகள் கூட்டணி அமைத்துள்ளனர். இக்கூட்டணியில் இரு இடதுசாரி கட்சிகளும் தலா 3 இடங்களில் போட்டியிடுவார்கள்.
ஆந்திராவில் இரு கட்சிகளுக்கும் தலா 2 சீட் மட்டுமே கொடுக்கவுள்ளார் நாயுடு. அதற்கு மேல் தர இயலாது என அவர் கூறி விட்டார்.
ஆந்திராவில் தற்போது இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சேர்த்து 2 எம்.பிக்கள்தான் உள்ளனர். தமிழகத்தில் இரு கட்சிகளுக்கும் சேர்த்து நான்கு எம்.பிக்கள் உள்ளனர்.
பீகார், ஒரிசா, ராஜஸ்தானில் தங்களுக்கு இந்த முறை நல்ல வெற்றி கிடைக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது. இதன் மூலம் 40 தொகுதிகளுக்கு மேல் இடதுசாரிகளுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பிருப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.
பீகாரில் சிபிஐ (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியுடன் முதல் முறையாக சிபிஎம்மும், சிபிஐயும் கூட்டணி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று கட்சிகளுக்கும் தலா ஒரு சீட் கிடைக்கும் என்பது சிபிஎம்மின் நம்பிக்கை.
அதேபோல ஒரிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளத்துடன் இடதுசாரிகள் கை கோர்த்துள்ளனர். இதுவும் லாபத்தைத் தரும் என அவர்கள் கருதுகிறார்கள்.
இங்கு ஆளுக்கு ஒரு தொகுதியில் இரு இடதுசாரிகளும் போட்டியிடவுள்ளனர். இதுதவிர மொத்தமாக 9 சட்டசபைத்
ராஜஸ்தானில் சிகார் தொகுதியில் வெற்றியை எதிர்பார்க்கிறது இடதுசாரி கூட்டணி. அஸ்ஸாமில் ஜோர்ஹாத், அந்தமான்,நிக்கோபார் தீவுகள், ஜார்க்கண்ட்டில் ஹஸாரிபாக் ஆகியவற்றிலும் வெற்றி கிடைக்கும் என்பது இடதுசாரிகளின் எதிர்பார்ப்பு.
எனவே கடந்த லோக்சபாவில் உள்ளதைப் போன்ற பலம் கிடைக்காவிட்டாலும் கூட 40 சீட்களுக்குக் குறையாமல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர் இடதுசாரிகள்.