திமுகவுக்கு பார்வர்ட் பிளாக் (சந்தானம்) ஆதரவு
மதுரை: பார்வர்ட் பிளாக் கட்சியின் சந்தானம் பிரிவு, திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுவரை அதிமுகவுக்கு ஆதரவாக இருந்து வந்த கட்சி பார்வர்ட் பிளாக். கடந்த சட்டசபைத் தேர்தலின்போதும் கார்த்திக்கை கழற்றி விட்டு விட்டு அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டது.
எல்.சந்தானம் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். கடந்த 96-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சோழவந்தான் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2001-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதே அ.தி.மு.க. கூட்டணியில் சோழவந்தான் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 3 முறை செல்லம்பட்டி யூனியன் தலைவராகவும் இருந்துள்ளார்
தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக சந்தானம் அறிவித்தார்.
நேற்று மதுரையில் மு.க.அழகிரியை டி.வி.எஸ்.நகரில் உள்ள அழகிரியின் தயா மகாலுக்கு வந்து சந்தித்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி தனது ஆதரவை தெரிவித்தார். சந்தானத்துக்கு அழகிரி பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சந்தானம் பேசுகையில்,
இந்த தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு பார்வர்டு பிளாக் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
1967-ல் இருந்து பார்வர்டு பிளாக் - தி.மு.க. உறவு மூக்கையா தேவரால் உருவாக்கப்பட்டது. அன்று முதல் தி.மு.க. கூட்டணியில் தான் இருந்தோம். இடையில் கட்சி தலையீட்டால் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலக நேரிட்டது. இந்த விலகல் எங்கள் கட்சிக்கு விபத்தாக அமைந்தது.
இடைக்காலத்தில் அ.தி.மு.க.வில் எங்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. மீண்டும் எங்கள் இயக்கத்தை மதிக்க கூடிய தி.மு.க. தலைமைக்கு ஆதரவு அளித்துள்ளோம். இன்றைக்கு தாய் வீட்டுக்கு வந்த உணர்வை அடைகிறோம்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கிறோம். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி அமைந்ததால் தான் தமிழகத்தில் 3 ஆண்டுகளில் ஏராளமான வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்துள்ளன.
5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி சிறப்பாக அமைந்தது. தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் தேவர் பெயரில் 3 கல்லூரிகளும் மதுரையில் தேவர் சிலையும் நிறுவப்பட்டது. தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்றார்.
மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், தென் மாவட்டங்களில் பிரசாரம் ஏற்கனவே தொடங்கி விட்டது. தென் மண்டல அமைப்பு செயலாளர் என்ற முறையில் 3 மாவட்டங்களில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டங்களில் நான் கலந்து கொண்டேன்.
தேர்தல் பணியாற்றுவது குறித்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. நாளை (இன்று) காலை விருதுநகரிலும் மாலையில் தேனியிலும் மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.
அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தென் மாவட்டத்தை பொறுத்த வரை 10 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.
வேறு கட்சியில் இருந்தும் பலர் திமுகவுக்கு வருவார்கள். சந்தானம் போல் ஆதரவும் தருவார்கள். விருதுநகர், தேனி செயல்வீரர்கள் கூட்டத்திலும் சேருவார்கள் என்று தகவல்கள் வந்துள்ளன.
சந்தானம் கூறியது போல் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி கூட்டணி ஆட்சியில் இருந்தால் தான் தொகுதிக்கு நன்மைகள் கிடைக்கும் என்றார்.