'கன்னியாகுமரி'-நாளை சத்தியமூர்த்தி பவன் முற்றுகை
நாகர்கோவில்: கன்னியாகுமரி தொகுதியை இன்றைக்குள் காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாளை காலை சென்னை சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான குமரி மாவட்ட காங்கிரஸார் போராட்டம் நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பழைய நாகர்கோவில் தொகுதியில் பாரம்பரியமாக காங்கிரஸே வெல்வது வழக்கம். ஆனால் இம்முறை கன்னியாகுமரி என பெயர் மாற்றப்பட்ட பின்னர் அத்தொகுதியை காங்கிரஸுக்குத் தராமல் திமுகவே தானே போட்டியிடுகிறது.
இதனால் குமரி மாவட்ட காங்கிரஸார் கோபமடைந்துள்ளனர். கடந்த 2 நாட்களாக அங்கு போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸார், தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச அமைக்கப்பட்ட ஐந்து பேர் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களின் உருவப் படங்களை தீயிட்டுக் கொளுத்தி போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டம் குறித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ஜெயபால் கூறுகையில், கன்னியாகுமரி தொகுதி பாரம்பரியாக காங்கிரஸ் வெல்லும் தொகுதி. இது காங்கிரஸின் கோட்டை.
இத்தகைய பெருமை படைத்த தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்காததால் காங்கிரஸார் மனம் புண்பட்டுள்ளது.
இன்றைக்குள் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாளை காலை 2000க்கும் மேற்பட்ட குமரி மாவட்ட காங்கிரஸார் சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் திரண்டு அமைதியான முறையில், அறவழியில் முற்றுகைப் போராட்டம் நடத்துவார்கள்
என்றார்.
ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக ஜெயபால் அறிவித்துள்ளார். இதேபோல கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ஜான் ஜேக்கப்பும் ராஜினாமா செய்வேன் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸாரின் இந்தப் போராட்டத்தால், திமுகவினர் அப்செட் ஆகியுள்ளனர். இருப்பினும் கட்சி மேலிடத்தின் உத்தரவுப்படி அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க அவர்கள் தீர்மானித்துள்ளனர்.