ராஜீவ் காந்தியை சுட்ட சீக்கியர் தேர்தலில் போட்டி
பாட்டியாலா: மறைந்த ராஜீவ் காந்தியை இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கைதாகி ஆயுள் தண்டனை பெற்றவரான கரம்ஜித் சிங் சுனம் என்பவர் லோக்சபாத தேர்தலில் போட்டியிடுகிறார்.
கடந்த 1986ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளின்போது டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி.
அப்போது அங்கிருந்த புதருக்குள் பதுங்கியிருந்த கரம்ஜித் சிங் சுனம், ராஜீவ் காந்தியை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டார். அதில், ராஜீவ் காந்தி அதிர்ஷ்வடசமாக உயிர் தப்பினார்.
பின்னர் பாதுகாப்புப் படையினர் சிங்கை வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
1984ம் ஆண்டு இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர் காங்கிரஸ்காரர்கள் சீக்கியர்களுக்கு எதிராக நடத்திய கொடும் கலவரத்தையும், வன்முறையையும், படுகொலைகளையும் கண்டித்தே இந்த செயலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தார் சிங்.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து ராஜீவ் காந்திய கூறிய கருத்துக்கள் தன்னை மிகவும் அவமானத்தில் ஆழ்த்தியதாகவும், தனது இனத்தை ராஜீவ் காந்தி மிகவும் இழிவாக விமர்சித்து விட்டதாக கருதியதால்தான் இவ்வாறு கொல்லத் துணிந்தேன் என்றும் கூறியிருந்தார் சிங்.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து அப்போது கருத்து தெரிவித்திருந்த ராஜீவ் காந்தி, பெரிய ஆலமரம் (இந்திரா காந்தி) விழும்போது, பூமியில் நடுக்கம் ஏற்படுவது சகஜம்தான் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜீவ் காந்தியை துப்பாக்கியால் சுடுவதற்காக பல மாதங்களாக திட்டமிட்டு வந்தார் சிங். இதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகருக்குச் சென்று ரூ. 3000க்கு ஒரு துப்பாக்கியையும் வாங்கினார். அதை வைத்துத்தான் ராஜீவ் காந்தியை அவர் சுட்டார்.
இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது சிங்குக்கு. கடந்த 2000மாவது ஆண்டு 14 ஆண்டு சிறைத் தண்டனை முடிந்து விடுதலையானார் சிங்.
சிறையில் இருந்த காலத்தில் அவர் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு ஆகியவற்றைப் படித்தார். விடுதலையாகி வெளியே வந்தவுடன் சட்டம் பயின்று தற்போது வக்கீலாக பணியாற்றி வருகிறார்.
சங்க்ரூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான சுனம் நகரில் வசித்து வரும் சிங், அங்குள்ள ஒரு பள்ளியின் நிர்வாகியாகவும் இருக்கிறார்.
தனது செயலுக்காக சிங் ஒருபோதும் வருந்தியதில்லையாம். இப்போதும் கூட அதற்காக வருந்தவில்லை என்கிறார்.
இதுகுறித்துக் கூறுகையில், நடந்ததை நினைத்துக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. நான் பேலட் மூலம் பேச நினைக்கிறேன். புல்லட்டால் பேச விரும்பவில்லை.
அகாலிதளமும், காங்கிரஸும் சீக்கியர்களுக்கு துரோகம் இழைத்த கட்சிகள். இரு கட்சிகளுமே, சீக்கியர்களுக்கு எதிரான 1984ம் ஆண்டு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிவாரணத்தையும் அளிக்கவில்லை. குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தவறியவை இந்தக் கட்சிகள். இவர்களை தொடர்ந்து நான் எதிர்ப்பேன் என்கிறார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிங், தான் பாட்டியாலா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார். விரைவில் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications