தமிழகத்தின் துணையுடன் இந்திய ஆதரவை பெறுவோம்-புலிகள்
கொழும்பு: தமிழக மக்களின் துணையுடன், இந்திய அரசின் ஆதரவைப் பெறுவோம் என்று விடுதலைப் புலிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச தூதரக உறவுகளுக்கான பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வராஜா பத்மநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவர் விடுதலைப் புலிகள் ஆதரவு இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது ..
தமிழகத்தின் துணையோடு, இந்திய அரசின் அனுதாபத்தையும், ஆதரவையும் பெற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு தமிழக மக்கள் தெரிவித்து வரும் உறுதியான ஆதரவுக்கு நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம்.
எந்தவித அரசியல் மற்றும் சுய நல எதிர்பார்ப்புகளும் இல்லாமல், தமிழக மக்கள் ஈழத் தமிழர்களை ஆதரித்து வருகின்றனர். தங்களது ஆதரவை உணர்வுப்பூர்வமாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது, கடல் கடந்து உள்ள எங்களது சகோதரர்கள் எங்களுக்கு ஆதரவாகவும், அனுதாபத்துடனும் இருப்பதை உணர்த்துகிறது. இது எங்களுக்கு ஆறுதலைத் தருகிறது.
இந்த உணர்வுப்பூர்வமான ஆதரவின் மூலம், தமிழக மக்களின் துணையின் மூலம், இந்திய அரசின் அனுதாபத்தையும், ஆதரவையும் பெற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
பாக் ஜலசந்தியைக் கடந்து வசிக்கும் எங்களது மக்களின் கலாச்சார உறவு, வரலாற்றுப் பூர்வமானது, வலுவானது. எப்போதெல்லாம் ஈழத் தமிழர்கள் தாக்கப்படுகிறார்களோ, துயரப்படுகிறார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் நாடும் முதல் புகலிடமாக இந்தியாதான் உள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு குறித்த கவலைகளை தமிழக மக்கள் ஒருபோதும் புறம் தள்ளியதில்லை. அதற்கும் மேலாக, ஈழத் தமிழர்களின் அபிலாஷைகளை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்றும் தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு போய் விடாமல் நாங்கள் மனிதக் கேடயங்களாப் பிடித்து வைத்திருக்கிறோம் என்பது தவறானது. நாங்கள் மக்களின் விருப்பத்தை மீறி அவர்களை கட்டுப்படுத்தியதில்லை.
எங்கள் பகுதியில் உள்ள தமிழ் மக்கள் ஆரம்பத்திலிருந்தே எங்களது நிர்வாகத்தின் கீழ் இருந்தவர்கள். ராணுவ நடவடிக்கை காரணமாக அவர்கள் அவ்வப்போது இடம் பெயர்ந்து கொண்டே வருகின்றனர். தங்களது பாதுகாப்புக்காக எங்களின் உதவிகளைக் கோரியே எங்களுடன் அவர்கள் இருக்கின்றனர். அவர்களைக் காக்க வேண்டியது எங்களது தார்மீகக் கடமையாகும்.
இலங்கை ராணுவம் ஈழத் தமிழர்களை எப்படியெல்லாம் சித்திரவதை செய்தது என்பதை எங்களது மக்கள் அறிவார்கள். அதனால்தான் அரசுப் பகுதிகளுக்கு அவர்கள் போக மறுக்கின்றனர்.
எங்களுடன் இருக்க வேண்டும் என்பதே வன்னி மக்களின் விருப்பம். ஆனால் பாதுகாப்பு வளையப் பகுதிகளில் குண்டுகளை வீசி மக்களை கொன்று குவித்து வரும் ராணுவத்திடமிருந்து தப்பவே அவர்கள் எங்களுடனேயே இருக்கிறார்கள்.
பேச்சுவார்த்தைக்கு முன்பாக ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்பது நடக்க முடியாதது, சாத்தியமி்ல்லாதது என்றார் பத்மநாதன்.