கண்ணாமூச்சி..பெங்களூரிலிருந்து சென்னைக்கு தவறி வந்த சிறார்கள்
சென்னை: பெங்களூரில் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிய நான்கு சிறுவர்கள், வழி தவறிப் போய் சென்னைக்கு வந்து விட்டனர். அவர்களை போலீஸார் மீட்டுள்ளனர்.
பெங்களூர் சிவாஜி நகரைச் சேர்ந்தவர்கள் ஜாகிர் (13), சஞ்சய் (11), கோபிநாத் (12), சுனில் (12).
பெங்களூர் சிட்டி ரயில் நிலையம் அருகே இவர்கள் தங்களது நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த ரயில் பெட்டி ஒன்றில் ஏறி இவர்கள் விளையாடியுள்ளனர்.
பெட்டியில் இருந்த ஒரு கழிப்பறைக்குள் மறைந்து கொண்டு விளையாடியுள்ளனர். அப்போது அந்த கழிப்பறை திடீரென மூடிக் கொண்டு விட்டது. இதனால் வெளியேற வழி தெரியாமல் அவர்கள் தவித்துள்ளனர்.
இந்த நிலையில் திடீரென அந்த ரயில் கிளம்பியுள்ளது. அப்போது ஒரு சிறுவன் எப்படியோ கதவைத் திறந்து விட்டான். ரயில் கிளம்பியதைப் பார்த்த அந்த சிறுவன் ரயிலிருந்து குதித்து தப்பினான்.
ஆனால் மற்ற நான்கு பேரும் தூங்கிப் போய் விட்டதால் அவர்கள் வெளியே வர முடியவில்லை.
இந்த நிலையில் ரயில் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போதுதான் நான்கு பேரும் விழித்துள்ளனர்.
சென்டிரல் ரயில் நிலையத்தில் இறங்கிய நால்வரும் பக்கத்தில் உள்ள மின்சார ரயில் நிலையத்திற்கு வந்தனர். கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலில் ஏறியுள்ளனர்.
அவர்களின் பேச்சு மற்றும் போக்கைப் பார்த்து சந்தேகமடைந்த பயணிகள், என்ன ஏது என்று கேட்டுள்ளனர். ஆனால் பயந்து போன சிறார்கள், திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இறங்கி விட்டனர். பின்னர் தெருத் தெருவாக அலைந்துள்ளனர்.
பின்னர் அங்குள்ள வடிவுடையம்மன் கோவில் அருகே வந்து நின்றனர். அப்போது அந்த வழியாக வந்த திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன், நான்கு சிறார்களையும் பார்த்து சந்தேகமடைந்து விசாரித்துள்ளார்.
இதுகுறித்து செந்தில் முருகன் கூறுகையில், நான் அவர்களிடம் விசாரித்தபோது அவர்களுக்குத் தமிழ் தெரியவில்லை. கன்னடத்தில் மட்டுமே பேசினர்.
இதையடுத்து காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றேன். ஏஅருகில் உள்ள கன்னடம் தெரிந்த ஒரு டீக்கடைக்காரரைக் கூப்பிட்டு வரச் சொல்லி அவர் மூலம் இவர்களிடம் விசாரித்தபோது நடந்ததைக் கூறினர்.
இதையடுத்து கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சிறார் உதவி மையத்திற்குத் தகவல் கொடுத்தோம். அவர்களிடம் நான்கு பேரையும் ஒப்படைத்தோம். தற்போது வட சென்னையில் உள்ள காப்பகத்தில் நான்கு பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார்.
நான்கு பேரின் பெற்றோர்களையும் தொடர்பு கொண்ட போலீஸார் குழந்தைகள் பத்திரமாக இருப்பதை தெரிவித்து வருமாறு அழைத்துள்ளனர். நான்கு பேரையும் சிறார் நல கமிட்டியிடம் போலீஸார் ஒப்படைக்கவுள்லனர். அவர்கள் சிறார்களின் பெற்றோர்களை வரவழைத்து முறையான அடையாளங்களைக் கூறிய பின்னர் அவர்களிடம் ஒப்படைப்பார்கள்.