கஸாப் பாதுகாப்புக்கு ரூ. 6 கோடியில் வேன்
மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் அஜ்மல் கஸாப் என்ற தீவிரவாதி உயிருடன் பிடிபட்டான்.
இந்நிலையில் இவருக்கு வாதாட அஞ்சலி வாக்மேர் என்ற பெண் வக்கீல் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கஸாப் மீதான வழக்கு வரும் 6ம் தேதி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
கஸாபை விசாரணைக்கு கொண்டு வரும் வழியில் அவருக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்க மகாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து சுமார் ரூ. 6 கோடி மதிப்பு கொண்ட அதி நவீன பாதுகாப்பு வேன் ஒன்றை இறக்குமதி செய்துள்ளது.
இந்த வேனில் ரூ. 2 கோடி மதிப்பிலான வெடிகுண்டுகளால் தகர்க்க முடியாத உறுதியான பகுதி ஒன்று உள்ளது. இதில் அடைக்கப்பட்டு தான் கஸாப் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட இருக்கிறார்.
மேலும் இந்த வேனில் ஸ்கேனர் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வேனை சுற்றிலும் உள்ள 200 மீ., சுற்றளவில் வெடி பொருட்கள் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க முடியும்.
இப்படி ஒரு பக்கம் மகாராஷ்டிரா அரசாங்கம் கஸாபின் பாதுகாப்புக்கு கோடி கணக்கில் செலவழித்தாலும், அவருக்காக வழக்கில் ஆஜராகும் வக்கீல் அஞ்சலிக்கு பேசப்பட்டுள்ள சம்பள தொகை எவ்வளவு தெரியுமா? ரூ. 900 தானாம்.