இ.கம்யூவிடம் தென்காசியை திரும்ப பெறும் அதிமுக?
அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட தமிழகத்திலேயே அதிக அளவாக சுமார் 80 பேர் தென்காசியில் சீட் கேட்டு விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் சற்றும் எதிர்பாராமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தென்காசி ஒதுக்கப்பட்டது, அதி்முகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்து கட்சி நிர்வாகிகள் தலைமையகத்துக்கு ஏராளமான புகார்களை அனுப்பி வந்தனர்.
மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் தற்போதைய எம்பி அப்பாத்துரை மீது உள்ள அதிருப்தி, திறமையான வேட்பாளரை தேர்வு செய்வதில் உள்ள குழப்பம் ஆகியவற்றின் காரணமாக இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் வேட்பாளரை தேர்வு செய்ய திணறி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நெலலை மற்றும் தென்காசி அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் விருப்ப மனு கொடுத்தவர்களை நேர்காணலுக்கு நாளை 4ம் தேதி சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் சின்னத்துரை, வழக்கீல்நன்மை பாலசுப்பிரமணியம், எல்ஐசி வளர்ச்சி அதிகாரி ஸ்டாலின், புறநகர் மாவட்ட இளைஞரணி பொருளாளர் சண்முகசுந்தரம், இலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகையா, சங்கரன்கோவில் கருப்பசாமி, ஆகியோர் சென்னைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
தொகுதி கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்ட நிலையில் தென்காசி தொகுதி அதிமுகவினரை நேர்காணலுக்கு அழைத்திருப்பது அதிமுகவினருக்கு உற்சாகத்தையும், இந்திய கம்யூனிஸ்ட் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருப்பதுடன் மேலும் கூட்டணியில் தொகுதி மாற்றம் இருக்கலாம் என்ற சந்தேகததையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிமுக நிர்வாகி கூறுகையில், தொகுதி மாற்றம் என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இருந்தாலும் ஜெயலலிதா அழைத்தால் ஏதாவது முககிய காரணம் இல்லாமல் இருக்காது. தென்காசியை அதிமுகவுக்கு ஒதுக்கினால் வெற்றி நிச்சயம் என்றார்.