ஈழம்-பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் உண்ணாவிரதம்
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வந்து அப்பாவி தமிழர்களை காக்கும் வேண்டும் என கூறி சென்னையில் கிறிஸ்துவ பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் ஊர்வலம் சென்றனர். அதை தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர்.
இலங்கை அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க கோரியும், போர் நிறுத்தம் கொண்டு வர வலியுறுத்தியும் தமிழக ஒருங்கிணைந்த கிறிஸ்துவ அருட்பணியர் மனித உரிமை அமைப்பு சார்பில் ஊர்வலம் நடந்தது.
சென்னை மன்றோ சிலையிலிருந்து துவங்கிய ஊர்வலம், காமராஜர் சாலை, அண்ணா சாலை வழியாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் முடிந்தது. இதில் ஏராளமான கிறிஸ்துவ பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது பாதிரியார் ஒருவர் பேசுகையில்,
இலங்கையில் குடிமக்களாகிய தமிழர்கள், சிங்கள பேரினவாத வெறித்தனத்தால் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். தமிழர்களாக பிறந்த ஒரே காரணத்தால் இதுவரை ஒரு லட்சம் பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கள அரசின் மனிதநேயமற்ற இந்த போக்கை கண்டிக்கிறோம். அங்குள்ள தமிழர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் கிடைப்பதில்லை.
ஈழத்தமிழர்களுக்கு குடியிருப்பு இல்லை, குடிநீர் இல்லை, கழிப்பிட வசதி இல்லை, உணவு இல்லை, மருந்து இல்லை என்ற நிலை நிலவுகிறது. இது ஜனநாயக உரிமையை மீறிய செயலாகும். இதை கடுமையாக கண்டிக்கிறோம்.
பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழர்களை வைத்துக்கொள்கிறோம் என கூறி இலங்கை ராணுவம் அவர்களை கொன்று குவித்துவருகிறது.
அதற்காக குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்கள், மனித உரிமையாளர்கள் வேனில் கடத்தப்படுவது அன்றாட நிகழ்ச்சியாக உள்ளது. உடனடியாக அங்கு போர் நிறுத்தம் செய்யவேண்டும். தமிழர்களின் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.
உண்ணாவிரதத்தை முடித்து வைத்த நெடுமாறன்...
இதையடுத்து இலங்கை தமிழர் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நெடுமாறன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இங்கிலாந்து மற்றும் அமெரிக்க தூதரகத்தில் மனு கொடுத்துள்ளனர். இலங்கை தூதருக்கு மனு கொடுக்க அனுமதி கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications