ஜெயலலிதாவுக்கு ப.சிதம்பரம் எச்சரிக்கைக் கடிதம்!
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பிரச்சாரத்தில் ஈடுபடும் முக்கியத் தலைவர்களுக்கு தீவிரவாதிகள் குறி வைக்கலாம் என மத்திய உள்துறைக்கு இன்டெலிஜென்ஸ் பீரோ எச்சரிக்கை அனுப்பியுள்ளது.
இதையடுத்து முக்கிய தலைவர்களின் பாதுகாப்பு குறித்து உள்துற அமைச்சர் ப.சிதம்பரம் ஆலோசனைகள் நடத்த ஆரம்பித்துள்ளார். நேற்று பாஜக தலைவர் அத்வானியை சந்தித்து அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கினார்.
மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள தலைவர்களுக்கு ப.சிதம்பரம் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி வருகிறார். மொத்தம் 40 அரசியல் தலைவர்களுக்கு சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு...
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக ஐ.பி. கூறியுள்ளது.
இதையடுத்து ஜெயலலிதாவுக்கும் ப.சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார். பொது இடங்களில் செய்யக் கூடாதது, தவிர்க்க வேண்டியது என்ற ஒரு பட்டியலை கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
வேலைக்காரர்கள் முன் கவனம்...
தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மத்திய, மாநில பாதுகாப்பு அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குங்கள். உங்களுடைய தேர்தல் சுற்றுப் பயணத் திட்டத்தை அவர்களிடம் முன்னதாகவே பகிர்ந்து கொள்ள கேட்டுக் கொள்ளுங்கள்.
வீட்டில் வேலைக்காரர்கள் முன்னிலையில் பயணத் திட்டம் பற்றி ஆலோசனை செய்ய வேண்டாம்.
உணவில் கவனம்..
தங்களுக்கு வழங்கப்படும் உணவுகளை சாப்பிடுவதற்கு முன் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பிரச்சார ஊர்வலம், பேரணியின் போது அருகில் வரும் நபர்களை உன்னிப்பாக கவனியுங்கள்.
பயணத் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அவ்வப்போது தெரிவியுங்கள்.
பாதுகாப்பு விதிமுறைகளை பிசகாமல் கடைபிடியுங்கள். முன்பின் தெரியாதவர்களிடம் பூங்கொத்துகளை வாங்குவது, மாலைகள், பொன்னாடைகளை பெறுவதைத் தவிர்க்கவும் என்று கூறப்பட்டுள்ளது.