திமுக: தூத்துக்குடியில் பெரியசாமி மகனுக்கு வாய்ப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதியில் அந்த மாவட்டச் செயலாளர் பெரியசாமியின் மகன் ஜெகனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் தி்முக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் சென்னையில் நேற்று தொடங்கியது.
இதில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட மாவட்ட செயலாளர் பெரியசாமியின் மகன் ஜெகன், முன்னாள் எம்பிக்கள் ஜெயசீலன், கோவில்பட்டி ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயதுரை, கே.ராஜாராம், பட்டிவீரன்பட்டி சவுந்திரபாண்டியனார் பேரன் பாண்டிநாதன், பேராசிரியர் கார்த்திகேயன், முன்னாள் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் மனைவி சந்திரா உள்ளிட்டோர் விருப்ப மனு அளித்தனர்.
இவர்களுக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்தது. ஒவ்வொருவரிடமும் வெற்றி வாய்ப்பு நிலவரம் பற்றி முதல்வர் கருணாநிதி மற்றும் தலைவர்கள் கேட்டறிந்தனர்.
தூத்துக்குடி தொகுதியில் மாவட்ட செயலாளர் பெரியசாமியின் மகன் ஜெகன் அல்லது எம்பி ஜெயசீலன் ஆகியோரில் ஒருவர் போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.