குமரி கிடையாது-கதவைச் சாத்திய சுதர்சனம்!
சென்னை: கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது. அங்கு திமுகவின் வெற்றிக்காக பாடுபடும் வழியைப் பாருங்கள் என்று குமரி மாவட்ட காங்கிரஸாரிடம், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் திட்டவட்டமாக கூறி விட்டார். இதனால் கடந்த நான்கு நாட்களாக சென்னையில் முகாமிட்டிருந்த கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸார் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஊருக்குப் போய் தங்களுக்குள் முடிவெடுக்கப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனால் திமுகவின் வெற்றிக்கு குமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஒத்துழைப்பு தர மாட்டார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கன்னியாகுமரி தொகுதியை காங்கிரஸுக்கே ஒதுக்க வேண்டும். நாகர்கோவில் தொகுதியாக இருந்தபோது அதில் பாரம்பரியமாக காங்கிரஸ்தான் வென்று வந்தது. காமராஜர் நின்று வென்ற தொகுதி. எனவே இதை காங்கிரஸுக்கே ஒதுக்க வேண்டும் என காங்கிரஸார் கோரி வருகின்றனர்.
இதை வலியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதனால் காங்கிரஸ் அலுவலகம் பரபரப்பாகிக் கிடந்தது.
கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸாரின் கோபம் பொதிந்த போராட்டத்தைத் தொடர்ந்து மாநிலத் தலைவர் தங்கபாலு, சுதர்சனத்துடன் போய் முதல்வர் கருணாநிதியை சந்தித்து கன்னியாகுமரியை எங்களுக்குத் தர முடியுமா என்று கேட்டுப் பார்த்தார்.
ஆனால் முதல்வர் கருணாநிதி திட்டவட்டமாக மறுத்து விட்டதாக தெரிகிறது. மேலும், கன்னியாகுமரி தொகுதிக்கான வேட்பாளரையும் கூட திமுக முடிவு செய்து விட்டது.
இந்த நிலையில், இன்றும் சத்தியமூர்த்தி பவனுக்கு குமரி மாவட்ட நிர்வாகிகள் வந்து சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனத்திடம் பேச்சு நடத்தினார்கள். சுமார் 2 மணி நேரம் பேசியும் உடன்பாடு ஏற்படவில்லை.
அவர்களிடம் சுதர்சனம் பேசுகையில், கன்னியாகுமரி தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்கியதை இனி மாற்ற முடியாது. தி.மு.க.வின் வெற்றிக்கு பாடுபடுங்கள் என்று சுதர்சனம் திட்டவட்டமாக கூறி விட்டாராம்.
இதனால் கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸார் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சுதர்சனத்தைப் பார்த்து பேசிய பின்னர் வெளியே வந்த எம்.எல்.ஏ ஜெயபால் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 4 நாட்களாக கன்னியாகுமரி தொகுதியை காங்கிரசுக்கு பெற்றுத்தரக்கோரி சென்னையில் முகாமிட்டிருந்தோம். ஆனாலும் பலன் இல்லை.
4 நாட்களாக பேசியும் தொகுதி ஒதுக்கியதை மாற்ற முடியாது. தி.மு.க.வுக்கு கன்னியாகுமரி தொகுதி ஒதுக்கப்பட்டு விட்டதால் கூட்டணி வெற்றிக்காக பாடுபடுங்கள் என்று கூறி விட்டனர்.
தொகுதி கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்புகிறோம்.
கன்னியாகுமரிக்கு சென்று மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேசி அடுத்தக்கட்ட முடிவை அறிவிப்போம் என்றார்.
இதனால் திமுகவின் வெற்றிக்கு குமரி மாவட்ட காங்கிரஸார் ஒத்துழைப்பு தருவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பேசிப் பயன் இல்லை ..
இதற்கிடையே, குமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேசிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுதர்சனம் கூறுகையில்,
கன்னியாகுமரி மாவட்டம் காமராஜர் வெற்றி பெற்ற தொகுதி. அதனால் காங்கிரசுக்கு தொகுதியை கேட்பது நியாயம்தான். இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் கூட்டணி கட்சியான தி.மு.க.வுக்கு கன்னியாகுமரி ஒதுக்கப்பட்டு விட்டதால் அதைப்பற்றி பேசி இனி பயன் இல்லை.
தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு காங்கிரஸ் நண்பர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 15 தொகுதிகளில்தான் காங்கிரஸ் போட்டியிடுகிறது. மீதி தொகுதிகளில் நமது கூட்டணி கட்சியினர் போட்டியிடுவதால் அவர்களின் வெற்றிக்கும் பாடுபடுவதுதான் கூட்டணி தர்மமாகும்.
தி.மு.க.வும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை நமக்கு விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்றார்.