நாஞ்சில் சம்பத்துக்காக வைகோ இன்றும் வாதம்
சென்னை: நாஞ்சில் சம்பத்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்தது சட்டவிரோதம் என்று இன்றும் உயர்நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாதாடினார். இதையடுத்து விளக்கமளிக்குமாறு கூறி தமிழக அரசுக்கும், திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், திருப்பூர் பொதுக் கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவர் கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று அறிவித்து விடுதலை செய்ய வேண்டும் என்று நாஞ்சில் சம்பத்தின் மனைவி சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் தர்மாராவ், சி.டி.செல்வம் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது சசிகலா சார்பில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோர்ட்டில் ஆஜராகி வாதாடினார்.
அப்போது நீதிபதிகளில் ஒருவரான செல்வம், இந்த வழக்கை தான் விசாரிக்க விரும்பவில்லை என்று தெரிவித்து வேறு பெஞ்சுக்கு மாற்றுமாறு கோரினார்.
இதையடுத்து வேறு பெஞ்சுக்கு வழக்கு மாற்றப்பட்டது. இன்று அந்த வழக்கு நீதிபதிகள் முருகேசன், கர்ணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இன்றும் வைகோ ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கூறுகையில், நாஞ்சில் சம்பத் மார்ச் 1-ந் தேதி திருப்பூர் கூட்டத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசினார். அவரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர். 14-ந்தேதி அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
அவர் விடுதலையாகிற நேரத்தில் அவசர அவசரமாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர். 4 மணி நேரத்தில் கலெக்டர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டு உள்ளார். இதில் உள்நோக்கம் இருக்கிறது.
நாஞ்சில் சம்பத் எங்கள் கட்சியில் கொள்கை பரப்பு செயலாளர். மிகச்சிறந்த பேச்சாளர். இப்போது பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. எங்கள் கட்சிக்கு முக்கிய பிரசார பீரங்கியாக அவர் திகழ்கிறார்.
எனவே அவரை பிரசாரம் செய்ய விடாமல் தடுக்கவே அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை போட்டு கைது செய்து உள்ளனர். இது சட்ட விரோதம், எனவே அவரை விடுதலை செய்ய உத்தரவிர வேண்டும் என்றார் வைகோ.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி முருகேசன், இது ஒரு முக்கியமான வழக்கு. சட்ட நுணுக்கங்களை கொண்டது. அதை ஆராய்ந்து பார்த்துதான் எங்கள் உத்தரவை பிறப்பிக்க முடியும். எதிர்தரப்பு பதிலை பெற்று அதன் பிறகே முடிவு எடுக்க முடியும்.
எதிர் தரப்பு பதில் வருவதற்கு முன்பு இதில் வாதாடுவதும் சரியாக இருக்காது. நீங்கள் எப்போதாவது மட்டுமே கோர்ட்டில் ஆஜர் ஆவதால்தான் வாதாட அனுமதித்து இருக்கிறோம் என்றார்.
பின்னர் அரசு சார்பில் ஆஜரான வக்கீல் குமரேசன் வாதிடுகையில், இந்த மனு தொடர்பாக எங்கள் தரப்பில் பதில் கொடுக்க வேண்டும் இதற்கு கால அவகாசம் தேவை. 6 வாரம் வரை தேவைப்படுகிறது. எனவே வழக்கை 6 வாரத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றார்.
அதற்கு நீதிபதிகள் 4 வார காலத்தில் பதில் தருமாறு கூறினார்கள். உடனே வைகோ குறுக்கிட்டு 4 வாரம் என்பது அதிக காலம். நாஞ்சில் சம்பத் தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல வேண்டும். எனவே 1 வார காலம் மட்டும் வழங்க வேண்டும் என்றார்.
அதற்கு நீதிபதிகள் 2 வார காலத்தில் அரசு பதில் அளிக்க வேண்டும், பொதுத்துறை செயலாளரும், திருப்பூர் கலெக்டரிமும் இதற்கான பதில்களை தாக்கல் செய்ய வேண்டும். 20-ந்தேதிக்கு வழக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அன்றே இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.