பாஜக கூட்டணியில் கிருஷ்ணசாமி-தென்காசியில் போட்டி!
சென்னை: தென்காசி (தனி) தொகுதியில் பாஜக ஆதரவுடன் போட்டியிட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திட்டமிட்டுள்ளார்.
தனக்கென நிலையான திட்டம் இல்லாதவர் கிருஷ்ணசாமி. ரஜினி உண்ணாவிரதம் இருந்தாலும் அழைக்காமலேயே வந்து மேடையில் அமர்ந்துவிடுவார், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தாலும் வந்து வாழ்த்துவார்.
அப்போதைக்கு ஏதாவது செய்தியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற அளவிலேயே அவரது அரசியல் நடவடிக்கைகள் சுருங்கிப் போயுள்ளன. இந் நிலையி்ல் வரும் தேர்தலில் தென்காசி தொகுதியில் அதிமுக ஆதரவுடன் போட்டியிட முயற்சித்தார். ஆனால், அந்தத் தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜெயலலிதா ஒதுக்கிவிட்டார்.
இதையடுத்து பாஜகவுடன் பேச ஆரம்பித்துள்ளார்.
திமுக, அதிமுக கூட்டணியில் இடம் பெறாத பாஜக, சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி பேச்சு நடத்தி வருகிறது.
இவர்களோடு புதிய தமிழகமும் பாஜக கூட்டணியில் இணையவுள்ளது. தென்காசியில் பாஜகவுக்கு ஓரளவுக்கு வாக்கு வங்கி உள்ளதால் அவர்களுடன் கைகோர்க்க கிருஷ்ணசாமி திட்டமிட்டுள்ளார்.