'கத்திரிக்காய் வியாபாரம்'..நாங்க தந்தா 5..நீங்க 'எடுத்தா' 4..-மதிமுகவிடம் அதிமுக..!

கிட்டத்தட்ட கத்திரிக்காய் வியாபாரம் மாதிரி தான் அதிமுக-மதிமுக கூட்டணிப் பேச்சு நடந்து கொண்டுள்ளது. சந்தைகளில் கத்திரிக்காயை கூறு கட்டி வைத்திருப்பார்கள். ஒரு கூறு 3 ரூபாய். அதில் சொத்தையும் இருக்கும். சொத்தை வேண்டாம், நல்ல கத்தரிக்காய் தான் வேண்டும் கூறு வாங்கக் கூடாது. தனியாக பொறுக்கி வாங்கலாம். அப்படி வாங்கும்போது கூறு மாதிரி சீப் ரேட்டுக்கு கிடைக்காது, விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
தனக்கு வேண்டிய தொகுதிகள் வேண்டும் என்றால் அதற்கான 'விலையை'த் தர வேண்டிய நிலையில் மதிமுக உள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு தொகுதிப் பங்கீடு சிக்கல் நீடித்து வருகிறது.
இந் நிலையில் இந்தப் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தை அவரசமாகக் கூட்டினார் அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ.
நீங்கள் விரும்பும் தொகுதிகள்தான் வேண்டும் என்றால் 4 மட்டுமே தரப்படும் என்றும், நாங்கள் தரும் தொகுதிகளைப் பெற்றுக் கொள்வதாக இருந்தால் 5 தொகுதிகள் தரப்படும் என்றும் தன்னிடம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியதாக நிர்வாகிகளிடம் வைகோ விளக்கினார்.
மாலை 4 மணி முதல் இரவு 8 மணிவரை நீடித்த இக் கூட்டத்தில் அதிமுக ஒதுக்கும் தொகுதிகள், நாம் கேட்டால் கிடைக்கும் தொகுதிகளில் மதிமுகவின் பலம் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆனால், இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இன்று ஜெயலலிதாவிடமிருந்து மதிமுகவுக்கு அழைப்பு வரும் என்று எதிர்பாக்கும் வைகோ இன்று மாலையும் மதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
தொகுதிகளை மதிமுகவே தேர்வு செய்வது என்றால் விருதுநகர், திருப்பூர், தஞ்சை, பொள்ளாச்சி ஆகியவற்றை வைகோ கோருவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications