விடுதலைப் புலிகள் பெயரில் கருணாநிதி குடும்பத்துக்கு மிரட்டல்

இது குறித்து சென்னை மாநநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதல்வர் கருணாநிதிக்கு தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.இ.) இயக்கத்திடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய அரசின் உள்துறையிடமிருந்து ஏற்கனவே தகவல் வந்து இருப்பதைத் தொடர்ந்து முதல்வருக்கு இசெட் பிளஸ்' அளவுகோலின்படி பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில், 3.4.2009 அன்று முதல்வரின் கோபாலபுரம் இல்ல முகவரியில் பெறப்பட்ட கடிதம் ஒன்றில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சின்னம் அச்சடிக்கப்பட்ட தாளில் அவரது உயிருக்கு அச்சுறுத்தி மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, சென்னை மாநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கடிதத்தை பச்சை மையை பயன்படுத்தி எழுதியுள்ளனர்.
இந்தக் கடிதம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளோடு ஆணையர் ராதாகிருஷ்ணன் அவசர ஆலோசனை நடத்தினார்.
மேலும் நகர் முழுவதும் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனையும் முடுக்கி விடப்பட்டது. சென்னை மாநகரம் முழுவதும் இரவு ரோந்தும், கண்காணிப்பும், வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மிரட்டல் கடிதம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் விஜயகுமாரியின் நேரடி மேற்பார்வையில் இ.பி.கோ.506, 507 (மர்ம கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்தல்) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் நேற்று இரவே வழக்குப் பதிவு செய்யப்பட்டு உடனடியாக விசாரணையும் தொடங்கப்பட்டது.
குடும்பத்தோடு தீர்த்துக் கட்டுவோம்..
முதல்வர் கருணாநியையும், அவரது குடும்பத்தாரையும் தீர்த்துக் கட்டப் போவதாக அந்தக் கடிதம் கூறுகிறது. தமிழரசன் என்ற பெயரில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழ் இனம் அழிவதற்கு காரணமாக செயல்படும் கருணாநிதியே, சோனியாவின் கைப்பாவையாக செயல்படுகிறாய். தேர்தல் பிரசாரத்துக்கு நீ ரோட்டுக்கு வரத்தானே செய்வாய். அப்போது உன்னை பார்த்துக் கொள்கிறோம். உனக்கும் உன் குடும்பத்தினருக்கும் சாகும் நேரம் வந்துவிட்டது என்று மிரட்டப்பட்டுள்ளது.
கடிதம் அனுப்பியவரை பிடிக்க 3 சிறப்பு தனிபடைகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடிதம் சென்னை கோயம்பேட்டில் இருந்து அனுப்பப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கடிதத்தை தடயவியல் சோதனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர். முதல்வரின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வந்த மிரட்டல் கடிதம்..
இதற்கிடையே கடந்த 10 தினங்களுக்கு முன்பு கோபாலபுரத்தில் முதல்வர் கருணாநிதியின் வீட்டின் அருகே உள்ள வேணுகோபாலசாமி கோயிலுக்கும் ஒரு மர்ம கடிதம் வந்தது.
அதில், கருணாநிதியின் குடும்பத்தினர் இந்த கோயிலுக்கு வந்து தான் சாமி கும்பிடுகிறார்கள். ஈழத் தமிழர்களுக்கு எதிராக கருணாநிதி செயல்படுகிறார். எனவே அவர்களுக்கு பிரசாதம் வழங்கக் கூடாது என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications