For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களை ஏமாற்றும் திராவிட கட்சிகள்-மாயாவதி

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: நலிவடைந்த பிரிவினருக்கும், தொழிலாளர்களுக்கும் சமூக, பொருளாதார விடுதலை கிடைக்க மக்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என உ.பி. முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பிரசாரத்தை மதுரையில் நேற்று தொடங்கினார் மாயாவதி. மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் நடந்த பிரமாண்டக் கூட்டத்தில் மாயாவதி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ஜாதிகளற்ற சமுதாயம் அமைய வேண்டும் என்பது டாக்டர் அம்பேத்கரின் கனவு. அந்தக் கனவை நனவாக்கி வரும் ஒரே கட்சி பகுஜன் சமாஜ் மட்டுமே.

பகுஜன் சமாஜ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால், உ.பியில் உள்ளதைப் போன்ற இட ஒதுக்கீடு மற்றும் பொருளாதார கொள்கைளை தேசிய அளவில் அமல்படுத்துவோம்.

வேலைவாய்ப்பு, சமத்துவம் ஆகியவைதான் நக்சலிசம், தீவிரவாதம், மோதல்களுக்கு தீர்வாகும்.

திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்காக ஏகப்பட்ட சலுகைகளை காட்டி மக்களை ஏமாற்றி வருகின்றன. இதை மக்கள் நம்பி ஏமாந்து விடக் கூடாது. அவர்கள் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்கு வர உதவியாக அக்கட்சிக்கு வாக்களிக்க முன்வர வேண்டும்.

மேல் தட்டு மக்களுக்கும், கோடீஸ்வரர்களுக்கும் மட்டும்தான் காங்கிரஸும், பாஜகவும் உழைத்து வருகின்றன. அவர்களது பொருளாதார கொள்கைகள் எல்லாம் சாதாரண மக்களுக்கானது அல்ல.

சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் பொருளாதாரக் கொள்கைதான் சரியாக இருக்கும்.

உ.பியில், அனைத்து சமுதாயத்தினருக்கும் பலன் அளிக்கும் வகையில், பலன் அடையும் வகையில், பல்வேறு நல வாரியங்களை நாங்கள் அமைத்துள்ளோம்.

தனியார் துறையிலும், பிற அமைப்புகளிலும் கூட தலித் மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்து போராடும்.

மத்தியில் இதுவரை இருந்து வந்த கட்சிகளும், இப்போது இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், ஏழைகள், விவசாயிகள், சிறு வியாபாரிகளின் நலன்களைக் காக்கத் தவறி விட்டன. அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறி விட்டன என்றார் மாயாவதி.

பின்னர் 16 பக்க தமிழக தேர்தல் அறிக்கையையும் மாயாவதி கூட்டத்தின்போது வெளியிட்டார்.

மேலும், அம்பேத்கர், பெரியார், ஸ்ரீநாராயண குரு ஆகியோர் குறித்த சிடியையும் அவர் வெளியிட்டார். கட்சியின் தமிழக கிளைக்கான இணையதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

கட்சியின் பொதுச் செயலாளர் சுரேஷ் மானே பகுஜன் சமாஜ் கட்சியின் 24 தமிழக வேட்பாளர்களின் பெயர்களையும் அறிவித்தார். அவர்களை மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ மாயாவதியிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

மேனகாவுக்கு கடும் கண்டனம்:

இந் நிலையில் இன்று லக்னெளவில் பொதுக் கூட்டத்தில் பேசிய மாயாவதி,

காந்தி குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சட்டத்தை மீற முடியாது. வருண் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சந்திப்பது எளிதல்ல, அது மேனகாவாக இருந்தாலும் சரி. உத்தரப் பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கைக் குலைக்க யாருக்கும் அனுமதி இல்லை.

மாயாவதி தாயாக இருந்திருந்தால் அன்பு குறித்து ‌தெரிந்திருக்கும் என மேனகா கூறியுள்ளார். அன்பாக நடந்து கொள்ள தாயாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. மேனகா ஒரு பையனுக்கு மட்டும் தான் தாய். நான் நூற்றுக்கணக்கானோரை பராமரித்து வருகிறேன்.

மேனகா பேசிய பேச்சுக்கு என்னிடம் மன்னிப்பு கேட்ட வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X