யு.எஸ்: வியட்நாம் நபர் சுட்டதில் 13 பேர் பலி-தானும் தற்கொலை, தலிபான் பொறுப்பேற்பு
பிங்காம்டன் (நியூயார்க்): அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம், பிங்காம்டன் என்ற நகரில் மர்ம நபர் ஒருவர் வெறித்தனமாக சுட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் அந்த நபர் தன்னையும் சுட்டுக் கொண்டு உயிரிழந்தார். அவர் வியட்நாமைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது.
இந் நிலையில் இந்தத் தாக்குதலுக்கு தலிபான் பொறுப்பேற்றுள்ளது அதிர்சசியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் தங்கள் அமைப்பினர் மீது அமெரிக்கா நடத்தி வரும் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தலிபான் தலைவர் மெசூத் தெரிவித்துள்ளார்.
பிங்காம்டனில் உள்ள குடியேற்றத் துறை அலுவலகத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த 13 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்து போய் விட்டனர்.
நியூயார்க் கவர்னர் டேவிட் பேட்டர்சன் இதுகுறித்து கூறுகையில், இந்த சம்பவத்தில் 12 முதல் 13 பேர் வரை இறந்துள்ளனர்.
சந்தேகப்படும்படியான 2 பேரை போலீஸார் பிடித்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஆசியர் எனத் தெரிய வந்துள்ளது. அவருக்கு வயது 30க்குள் இருக்கும் எனத் தெரிகிறது.
குடியுரிமை வாங்குவதற்காக காத்திருந்த கூட்டத்தினர் மீது அந்த மர்ம நபர் சரமாரியாக சுட்டுள்ளார்.
பின்னர் தன்னைத்தானே அவர் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் அமெரிக்கன் சிவிக் சங்க கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.
குடியேற்றப் பிரிவு அலுவலகத்தின் முன் பகுதிக்கு காரில் வந்து இறங்கிய அந்த நபர், பின்னர் உள்ளே நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளினார்.
உள்ளே நுழைந்த அவர் சிலரைப் பிணையாளிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டியதாகவும், பின்னரே துப்பாக்கிச்சூட்டில் இறங்கியதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. இருப்பினும் இதை போலீஸார் உறுதிப்படுத்தவில்லை.
அமெரிக்கன் சிவிக் சங்க தலைவர் ஏஞ்செலா லீச் இதுகுறித்துக் கூறுகையில், இது மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம். குடியுரிமை பெற விரும்புவோர், குடும்பப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கோரி வருவோர் என பல தரப்பினருக்கும் எங்களது சங்கம் உதவி செய்து வருகிறது.
இந்த இடத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது என்றார்.
இச்சம்பவத்தில் ஐந்து பேர் பலத்த குண்டுக் காயங்களுடன் ஜான்சன் சிட்டி, வில்சன் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களின் வயது 20 முதல் 50க்குள் இருக்கும் எனக் கருதப்படுகிறது. அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த பிங்காம்டன் நகர், நியூயார்க்கிலிருந்து 140 மைல்கள் தொலைவில் உள்ளது. இந்த நகரில் 47 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள்.
இதற்கிடையே தாக்குதல் நடத்திய அந்த நபரின் அடையாள அட்டையை பார்த்தபோது அவர் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ஜிவார்லி வாங் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
அவர் ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றியதாகவும் அதிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் தனது ஊழியர் அல்ல என ஐபிஎம் கூறியுள்ளது.
தலிபான் பொறுப்பேற்பு:
இந் நிலையில் இந்தத் தாக்குதலை தாங்களே நடத்தியதாக தலிபான் கூறியுள்ளது.
பாகிஸ்தானில் தங்கள் அமைப்பினர் மீது அமெரிக்கா நடத்தி வரும் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தலிபான் தலைவர் மெசூத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications