சென்னையில் 2 விடுதலைப் புலிகள் உள்பட 5 பேர் கைது
சென்னை: தகவல் தொடர்பு சாதனங்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்த முயன்றதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இருவர் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கியூ பிரிவு போலீஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில், இலங்கையைச் சேர்ந்த, அந்தோணி செபாஸ்டியன், இங்கிலாந்து குடியுரிமை பெற்ற இலங்கை தமிழர் மகேந்திரன் ஜெகநாதன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த குகன், கடலூரைச் சேர்ந்த ஜெயமோகன் ஆகியோரை போலீஸார் பிடித்தனர்.
அவர்களிடமிருந்து லேப்டாப் கம்ப்யூட்டர், சாட்டிலைட் போன் உள்ளிட்ட சில பொருட்கள் சிக்கின.
விசாரணையில் ஜெகநாதனும், செபாஸ்டியனும் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், புலிகள் இயக்கத்திற்குத் தேவையான ஆயுதங்களை வாங்க அவர்கள் சென்னையில் கூடியதும் தெரிய வந்தது.
சில நாட்களுக்கு முன்புதான் லண்டனிலிருந்து திரும்பியிருந்தார் ஜெகநாதன். இவர்கள் இருவருக்கும் ஜெயமோகன் மற்றும் குகன் ஆகியோர் உதவி செய்துள்ளனர்.
குகனை ராமநாதபுரத்திலும், ஜெயமோகனை கடலூரிலும் வைத்து போலீஸார் கைது செய்தனர். ஜெயமோகன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது.
மேலும் ஒரு இலங்கைத் தமிழர் கைது
இதேபோல சென்னையில் போலீஸார் நடத்திய வாகனச் சோதனையின்போது, ஜெயந்தன் என்ற இலங்கைத் தமிழர் சிக்கினார்.
அவரிடமிருந்து 25 சாட்டிலைட் போன்கள், ஒரு ஜிபிஎஸ் கருகவரி, ஒரு இரவில் பார்க்கக் கூடிய கருவி, ஒரு வாக்கி டாக்கி ஆகியவை சிக்கின.
இவருக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாமோ என முதலில் போலீஸார் சந்தேகப்பட்டனர். ஆனால் அதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை என்று பின்னர் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இருப்பினும் இவற்றை சட்டவிரோதமாக இவர் கொண்டு வந்ததால், எதற்காக கொண்டு சென்றார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.