8 எம்.பிக்களுக்கு மீண்டும் சீட் - 3 பேர் தொகுதி மாறி போட்டி
சென்னை: திமுகவில் 8 எம்.பிக்களுக்கு மீண்டும் சீட் கிடைத்துள்ளது. டி.ஆர்.பாலு உள்ளிட்ட 3 பேர் தொகுதி மாறி போட்டியிடுகின்றனர்.
திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் தற்போது எம்.பிக்களாக உள்ள 8 பேருக்கு மீண்டும் சீட் கிடைத்துள்ளது. அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராசா மற்றும் ஆதிசங்கர் ஆகியோர் தொகுதி மாறி போட்டியிடுகின்றனர்.
மற்றவர்கள் புதுமுகம் மற்றும் முன்னாள் எம்.பிக்கள் ஆவர்.
தென் சென்னையில் நான்கு முறை எம்.பியாக இருந்த டி.ஆர்.பாலு இம்முறை ஸ்ரீபெரும்புதூருக்குப் போயுள்ளார்.
அங்கு ஆர்.எஸ்.பாரதி புதுமுகமாக போட்டியிடுகிறார். இவர் திமுக வக்கீல்கள் பிரிவு செயலாளர் ஆவார். தற்போது ஆலந்தூர் நகராட்சித் தலைவராக இருக்கிறார்.
வட சென்னையில் 3 முறை எம்.பியாக இருந்த செ.குப்புசாமிக்குப் பதில் டி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.
மத்திய சென்னையில் 2வது முறையாக தயாநிதி மாறன் போட்டியிடுகிறார்.
புதிதாக உருவாக்கப்பட்டுளள திருவள்ளூர் தனி தொகுதியில் காயத்ரி ஸ்ரீதரன் போட்டியிடுகிறார்.
கிருஷ்ணகிரியில் மீண்டும் இ.ஜி.சுகவனமே போட்டியிடுகிறார். 2வது முறையாக அவருக்கு சீட் கிடைத்துள்ளது.
தர்மபுரியில் தாமரைச்செல்வன் புதுமுகமாக களம் இறங்கியுள்ளார். இங்கு திமுக போட்டியிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அரக்கோணத்தில் 1999ம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் திமுக போட்டியிடுகிறது. அந்த ஆண்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற ஜெகத்ரட்சகனே மீண்டும் இம்முறையும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்தான் ஜெகத்ரட்சகன் திமுகவில் இணைந்தார் என்பது நினைவிருக்கலாம்.
புதிதாக உருவாக்கப்பட்ட திருவண்ணாமலை தொகுதியில் வேணுகோபால் களம் இறங்குகிறார். இவர் இதுவரை திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வந்தார். அத்தொகுதியில் நான்கு முறை எம்.பியாக இருந்தவர் வேணுகோபால் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை வந்தவாசி தொகுதியாக இருந்ததுதான் தற்போது திருவண்ணாமலையாக மாறியுள்ளது. இங்கு 1971ம் ஆண்டுக்குப் பின்னர் இப்போதுதான் திமுக முதல் முறையாக போட்டியிடுகிறது.
பொள்ளாச்சியில் சண்முகசுந்தரம் புதுமுகமாக களம் இறங்குகிறார்.
கரூரில் கே.சி.பழனிச்சாமி 2வதுமுறையாக மீண்டும் போட்டியிடுகிறார்.
பெரம்பலூரில் இதுவரை போட்டியிட்டு வந்த ராசா நீலகிரிக்கு இடம் மாறியுள்ளார். அவருக்குப் பதில் நெப்போலியன் போட்டியிடுகிறார்.
தஞ்சாவூரில் 5வது முறையாக பழனிமாணிக்கம் போட்டியிடுகிறார்.
மதுரையில் முதல் முறையாக ...
மதுரையில் முதல் முறையாக திமுக போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளராக மு.க.அழகிரி களம் காணுகிறார். அழகிரி தேர்தல் ஒன்றில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.
அழகிரியின் அரசியல் வாழ்க்கையில் இந்தத் தேர்தல் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இதுவரை கட்சிப் பணிகளை மறைமுகமாக செய்து வந்த அழகிரிக்கு சமீபத்தில்தான் தென் மாவட்ட திமுக அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து தற்போது எம்.பி. சீட் தரப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் தற்போதைய எம்.பி. பவானி ராஜேந்திரனுக்கு சீட் மறுக்கப்பட்டு, நடிகர் ஜே.கே.ரித்தீஷ் வேட்பாளராகியுள்ளார். இவர் தேர்தல் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரன்தான் ரித்தீஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலூரில் தொகுதியில் 1999ம் ஆண்டு போட்டியிட்டு எம்.பி. ஆன ஆதிசங்கர், இம்முறை கள்ளக்குறிச்சி வேட்பாளராகியுள்ளார்.
நாகப்பட்டனம் தனி தொகுதியில் ஏ.கே.எஸ்.விஜயன் 3வது முறையாக களம் காண்கிறார்.
தூத்துக்குடியில் புதுமுகம் ஜெயதுரையும், கன்னியாகுமரியில் புதுமுகம் ஹெல்ன் டேவிட்சனும் வேட்பாளர்களாகியுள்ளனர்.
நாமக்கல் தொகுதியில், காந்தி செல்வன் புதுமுகமாக களம் இறங்கியுள்ளார்.
வேட்பாளர்களில் நெப்போலியன், ஜே.கே.ரித்தீ்ஷ் ஆகியோர் நடிகர்கள். இவர்களில் நெப்போலியன் ஒரு முறை எம்.எல்.ஏவாக (வி்ல்லிவாக்கம்) இருந்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலில் மயிலாப்பூர் தேர்தலில் போட்டியிட்டு எஸ்.வி.சேகரிடம் தோல்வி அடைந்தார்.
சிறுபான்மையின சமூகத்தில் கிறிஸ்தவ சமூகத்திற்கு மட்டும் திமுக வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. முஸ்லீ்ம் சமுதாயத்தினர் யாரும் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.