தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி இலங்கை கடற்படை சித்ரவதை
ராமேஸ்வரம்: கச்சத்தீவுக்கு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை அவர்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்துள்ளது.
ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் இருந்து 60க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு இலங்கை கப்பற்படையினர் 8 படகுகளில் வந்துள்ளனர். தமிழக மீனவர்களை கண்டதும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, அவர்களை நகரகூடாது என எச்சரிக்கை செய்துள்ளனர்.
பின்னர் மீனவர்களின் படகுகளில் இறங்கிய கடற்படையினர் அவர்களை அடித்து காயப்படுத்தியுள்ளனர். அவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, நிர்வாணமாக்கியுள்ளனர்.
பின்னர் கச்சத்தீவு மணலில் வெயிலில் நிர்வாணமாக கிடக்க செய்துள்ளனர். அவர்களது மீன்பிடி சாதனங்களை உடைத்து, சேதப்படுத்தினர். அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை அள்ளி சென்றுள்ளனர்.
மேலும் நடந்த சம்பவம் குறித்து டிவி, பத்திரிகைகளில் பேட்டி கொடுத்தால் அதை நாங்கள் பதிவு செய்வோம். மீண்டும் இந்த பகுதியில் மீன்பிடிக்க வரும்போது கடுமையாக தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்தனர். இதனால் பீதியடைந்த மீனவர்கள் தப்பித்தோம், பிழைத்தோம் என பாதியிலேயே கரை திரும்பினர்.
ஏற்கனவே மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் அட்டூழியத்தால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதி மீனவர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.