அதிமுக அல்லது பாஜகவுடன் கூட்டணி: கார்த்திக்
நெல்லை: வரும் லோக்சபா தேர்தலில் அதிமுக அல்லது பாஜகவோடு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி கூட்டணி சேரும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
நாடாளும் மக்கள் கட்சி நெல்லை மாவட்ட நிர்வாகிகளோடு நடிகர் கார்த்திக் நேற்று நெல்லையில் ஆலோசனை நடத்தினார்.
இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் துர்க்கை லிங்கம், மாநகர் மாவட்ட செயலாளர் ராணி சவுந்திரபாண்டியன், மாநகர தலைவர் ஐயப்பன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் காளிராஜ், மதுரை முத்துசாமி, பொன்.முருகன், கோவை பூபாலன், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில கட்சி வளர்ச்சி பற்றியும், கூட்டணி பற்றியும் விவாதிக்கப்பட்டது. அதிமுக அல்லது பாஜகவுடன் இணைந்து இத்தேர்தலில் போட்டியிடலாம் என நிர்வாகிகல் மத்தியில் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இரு கட்சிகளும் சீட் வழங்காவிட்டால் தேர்தலை தனித்தே எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் 19 ஒன்றிய செயலாளர்கள் கட்சியை விட்டு விலகியதாக கூறப்படும் சம்பவத்திற்கு கட்சி நிர்வாகிகளிடம் கார்த்திக் விளக்கம் கேட்டாராம்.
அதற்கு, முருகேச பாண்டியன், நல்லமுத்து, பாலு ஆகிய 3 மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்டதால் அவர்கள் அப்படியொரு செய்தியை பரப்பி வருவதாக நிர்வாகிகள் அவரிடம் தெரிவித்தனர்.
3 பேரும் சிலரிடம் பணம் வாங்கி கொண்டு செயல்படுவதாகவும் நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சேதுராமபாண்டியன் வழக்கு குறித்து கார்த்திக் கூறுகையில் கட்சியில் முக்கிய பிரமுகர் என்பதன் அடிப்படையில் ஆஸ்பத்திரியில் சென்று பார்த்தேன். அவர் விடுதலைக்கு நான் முழு முயற்சிகள் கொண்டு வருகிறேன். ஆனால் அவை யாவும் சட்டத்திற்கு உட்பட்டே இருக்கும் என நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.