பங்குச் சந்தை: 6 மாதங்களில் இல்லாத பெரும் உயர்வு!
மும்பை: சர்வதேச பொருளாதாரம் குறிப்பாக அமெரிக்கப் பொருளாதாரம் மீட்சி நிலை நோக்கித் திரும்புவதாக வரும் செய்திகளின் விளைவாக பங்குச் சந்தைகள் பரபரப்பான வர்த்தகத்துக்குத் திரும்பி விட்டன.
அதிலும் இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து 5வது நாளாக ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் கடந்த ஆறு மாத காலத்தில் இல்லாத அளவு அதிக புள்ளிகளுடன் வர்த்தகம் தொடர்கிறது.
இன்று காலை பங்குச் சந்தை திறக்கப்பட்டதுமே, 160 புள்ளிகள் அதிகரித்த நிலையில் வர்த்தகம் ஆரம்பித்தது. நிப்டியில் 92 புள்ளிகள் கூட, 3300 புள்ளிகள் என்ற புதிய உயரத்தைத் தொட்டுத் திரும்பியது.
இன்றைய வர்த்தகத்தை பெரிதும் முடுக்கிவிட்டிருப்பது ரிலையன்ஸ் பங்குகள்தான். இன்று காலை மட்டும் 4 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்தன ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள். ரிலையன்ஸ் டெலிகாம் பங்குகளோ 7.29 சதவிகித உயர்வைக் கண்டது. ரிலையன்ஸ் இன்ப்ரா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ, ஸ்டெரிலைட் இன்டஸ்ட்ரீஸ், டாடா பவர் நிறுவனங்களின் பங்குகள் எடுத்த எடுப்பிலேயே நல்ல லாபத்தில் கைமாறின.
இதர ஆசிய பங்குச் சந்தைகளும் இன்று பசுமையாகவே காணப்படுகின்றன. அமெரிக்க பங்குச் சந்தை தொடர்ந்து 4வது நாளாக நல்ல லாபத்தில் இயங்குகிறது.
முற்பகல் 11 மணி நிலவரப்படி சென்செக்ஸ்: 10547.72 (+198.89), நிப்டி: 3256.75 (+45.70)












Click it and Unblock the Notifications