சோனியா சொத்து ரூ.1.38 கோடி!: இந்தியாவில் வீடு இல்லை-இத்தாலியில் உண்டு
மகன் ராகுல் காந்தியை சோனியாவின் சொத்து சுமார் ரூ. 1 கோடி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் சோனியா காந்தி இன்று மனு தாக்கல் செய்தார். மனுவுடன் தனது சொத்து விவரங்களை சேர்த்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது ..
இத்தாலியில் உள்ள வீட்டின் மதிப்பு ரூ. 18.02 லட்சமாகும்.
எனது மொத்த சொத்து மதிப்பு ரூ. 13.8 கோடியாகும்.
ரொக்கம் ரூ. 75,000. வங்கி முதலீடுகள் ரூ. 28.61 லட்சம்.
ரூ. 20 லட்சம் மதிப்பிலான மியூச்சவல் பன்டுகள் உள்ளன. ரூ. 12 லட்சம் மதிப்பிலான ரிசர்வ் வங்கியின் பான்டு பத்திரங்கள் உள்ளன.
தபால் அலுவலக சேமிப்பு மதிப்பு ரூ. 1,99,000 ஆகும். பொது சேம நல நிதியில் ரூ. 24.88 லட்சம் இருப்பு உள்ளது.
2.5 கிலோ எடை நகை உள்ளது. இவற்றின் மதிப்பு ரூ. 11 லட்சம் ஆகும். இதுதவிர ரூ. 18 லட்சம் மதிப்புடைய 88 கிலோ வெள்ளிப் பொருட்கள் உள்ளன.
15 பிகாக்கள் பரப்பளவுடைய, ரூ. 2 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புடைய விவசாய நிலங்கள் இரண்டு உள்ளன.
2008-09ம் ஆண்டு வருமான வரியாக கட்டியது ரூ. 5 லட்சத்து 58 ஆயிரம். செல்வ வரியாக கட்டியது ரூ. 32 ஆயிரத்து 512 என்று குறிப்பிட்டுள்ளார் சோனியா காந்தி.
தான், இத்தாலியின் டூரின் நகரில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் 3 ஆண்டு வெளிநாட்டு பட்டப் படிப்பை (ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு) படித்துள்ளதாகவும், கேம்பிரிட்ஜில் உள்ள லென்னாக்ஸ் குக் பள்ளியில், ஆங்கில மொழியில் சான்றிதழ் படிப்பை முடித்துள்ளதாகவும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக உ.பி. மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நேரு - இந்திரா குடும்பத்தின் குடும்பத் தொகுதியாக 1960ம் ஆண்டுகளிலிருந்து விளங்கி வருகிறது ரேபரேலி. இங்குதான் 1967ம் ஆண்டு முதன் முதலில் இந்திரா போட்டியிட்டு வென்றார்.
அதற்கு முன்பாக அவரது கணவர் பெரோஸ் காந்தி இந்தத் தொகுதியில் எம்.பியாக இருந்தார். அதன் அடிப்படையில்தான் இந்திரா இந்தத் தொகுதியில் போட்டியிட்டார்.
இந்திரா மற்றும் ராஜீவ் மறைவுக்குப் பின்னர் ரேபரேலியை தனது தொகுதியாக மாற்றிக் கொண்டார் சோனியா. 2004ம் ஆண்டு அவர் இத்தொகுதியில் போட்டியிட்டு பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஏப்ரல் 30ம் தேதி இங்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில் இன்று காலை ரேபரேலியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் சோனியா. அவருடன் ராகுல் காந்தியும் உடன் வந்திருந்தார்.
முன்னதாக ரேபரேலியில் உள்ள கோவிலில் சோனியா காந்தியும், ராகுலும் சிறப்புப் பூஜைகள் செய்தனர்.
ரேபரேலி வந்த சோனியா, ராகுலுக்கு வழியெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று வரவேற்பளித்தனர்.