அஸ்ஸாமில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு - 6 பேர் பலி
குவஹாத்தி: அஸ்ஸாமில் தலைநகர் குவஹாத்தி மற்றும் தேஜ்பூரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 6 பேர் பலியானார்கள். 32 பேர் காயமடைந்தனர்.
குவஹாத்தியில் உள்ள மாலிகோவன் என்ற இடத்தில் இன்று காலை முதல் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது.
கார் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டது.
குண்டுவெடிப்பில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 32 பேர் படுகாயமைடந்தனர். ஏராளமான வாகனங்கள் தீயில் கருகின.
மாலிகோவன் பகுதியில் உள்ள மா சந்தோஷி கேபின் என்ற ஹோட்டலுக்கு அருகே வெடிகுண்டு காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திற்கு அருகில்தான் மக்கள் அதிக அளவில் வந்து போகும் சிவன் கோவில் உள்ளது. எப்போதும் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதைக் குறி வைத்துத்தான் இங்கு குண்டு வைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது. தொடர்ந்து குண்டுவெடிப்புகள் நடந்து வருவதால் ஆத்திரமடைந்த மக்கள் போலீஸாரையும், அவர்களது வாகனங்களையும் தாக்கினர்.
அப்பகுதியில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்புக்கு உல்பா தீவிரவாதிகளே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
தேஜ்பூரில் ...
அதேபோல, தேஜ்பூரில் உள்ள தேகாய்ஜுலி என்ற இடத்தில் குண்டுவெடித்தது. குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில்தான் ராணுவத்தின் முக்கிய தளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேஜ்பூர் குண்டுவெடிப்பில் உயிரிழப்பு எதுவும் இல்லை.
பிரதமர் மன்மோகன் சிங் நாளை குவஹாத்தி வருகிறார். இந்த நிலையில் இரு குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதால் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications