2வது முறையாக எம்.பியாக காத்திருக்கும் ஜெகத்ரட்சகன்

எம்.ஏ.டிலிட், பி.எச். முடித்தவர் ஜெகத்ரட்சகன். விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர் சொந்த ஊர். மகன் என்ஜீனியர், மகள் டாக்டர்.
வீர வன்னியர் பேரவை, ஜனநாயக முன்னேற்றக் கழகம் ஆகியவற்றைத் தொடங்கி நடத்தி வந்தார். சமீபத்தில் திமுகவில் இணைந்தார்.
பாரத் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கிறார். பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
1969 முதல் 1972 வரை தி.மு.க. மாணவரணி மாவட்ட செயலாளராகவும், 1972 முதல் 1977 வரை மாணவர் அணி மாநில செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
1980ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1984-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆனார்.
1999ல் அரக்கோணம் தொகுதியில் இருந்து திமுக சார்பில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஆர்.எம்.வீரப்பனுடன் இணைந்து எம்.ஜி.ஆர். கழகத்தைத் தொடங்கி நடத்தி வந்தார்.
எம்ஜிஆர் கழகத்தில் இருந்தாலும் திமுகவினரை விடவும் 10 'டெசிபல்' அதிகமாகவே முதல்வர் கருணாநிதியைப் பாராட்டி 'ஜால்ரா' அடித்து வந்தவர். எந்த நேரமும் திமுகவில் இணைய தயாராகவே இருந்தார்.. ஆர்.எம்.வீயின் ஆசியுடன்.
இந் நிலையில் அரக்கோணத்தில் பாமகவின் பலமிக்க வேலுவை எதிர்கொள்ள பலமான வேட்பாளரைத் தேடி ஜெகத்தை இறக்கிவிட்டுள்ளார் கருணாநிதி. இதற்காக 2 வாரத்துக்கு முன்னர் தான் திமுகவில் இணைந்தார் ஜெகத்.
இலக்கியத்தில் பெரும் ஆர்வம் கொண்ட ஜெகத்ரட்சகன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 42 புத்தகங்களை எழுதி இருக்கிறார். சென்னை கம்பன் கழகத்தின் கெளரவ துணைத் தலைவராக பதவி வகிக்கும் ஜெகத்ரட்சகன் சிறந்த பேச்சாளருமாவார். மேலும் ஆழ்வார்கள் ஆய்வு மையத்தையும் நடத்தி வரும் ஆன்மீகவாதி.
அரக்கோணத்தில் வன்னியரான இவரை களமிறக்கிவிட்டதன் மூலம் பாமகவுக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. ஜெகத்ரட்சகனின் ஜாதி, பண பலத்தை எதிர்கொள்வது பாமகவுக்கு பெரும் சிக்கலாக இருக்கும்.












Click it and Unblock the Notifications