கார்த்திக் கட்சி கூட்டத்தில் போலீஸ் தடியடி
நெல்லை: கடந்த வாரம் நாடாளும் மக்கள் கட்சி மாவட்ட ஒன்றிய பொருப்பாளர்கள் சிலர் கட்சியில் இருந்து விலகினர். இதை தொடர்ந்து நெல்லைக்கு வந்த நடிகர் கார்த்திக் மூன்று நாட்கள் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் நேற்று இரவு பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசினார். கூட்டத்தில் இளைஞர்கள் அதிகம் கலந்து கொண்டதால் தொடக்கம் முதல் ஆரவாரமாக இருந்தது. நெல்லை மாநகர உதவி போலீ்ஸ் கமிஷனர்கள் மகேந்திரன், ராமசந்திரன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கூட்டத்தில் நின்று கொண்டிருந்தவர்களை உட்காரும்படி போலீசார் வலியுறுத்தி கொண்டிருந்தனர். உற்சாக மிகுதியால் பெரும்பாலோர் கூட்டம் முடியும்வரை நின்று கொண்டே இருந்தனர். கூட்ட முடிவில் கார்த்திக்கை தொண்டர்கள் சூழ்ந்து வாழ்க கோஷம் போட்டனர். ஆனால் கார்த்திக் தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
கார்த்திக் கார் புறப்பட்டு சென்ற பின்னரும் போலீசார் தடியடி தொடர்ந்ததால் மாவட்ட செயலாளர் ராணி சவுந்திரபாண்டியன் ரோட்டின் நடுவே நின்று அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
எனினும் இறுதி நபர் கலைந்து செல்லும் வரை போலீசார் லத்தியை சுழற்றி கொண்டே இருந்தனர். போலீசார் நடத்திய இந்த தடியடி தாக்குதலால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக கூட்டத்தில் கார்த்திக் பேசுகையில்,
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சரணாலயம் என்ற அமைப்பை தொடங்கினேன். சிலர் அதை அரசியலாக கருதியதால் உண்மையிலேயே கட்சி ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் இந்த கட்சிக்கு தலைவனாக இல்லை. தொண்டனாக உள்ளேன்.
நாம் கை காட்டும் கட்சியே ஜெயிக்கும். மக்களுக்கு நன்மை செய்ய உத்திரவாதம் அளிக்கும் கட்சியை ஆதரிப்போம். பெரிய மலைக்கே அஞ்சாதவன், சின்ன சின்ன கற்களுக்கா அஞ்சுவேன். நான் பேசும் கருத்துகளை காப்பியடித்து தேர்தல் அறிக்கை, அரசு அறிக்கைகள் எல்லாம் வருகின்றன.
இடஓதுக்கீடு கஷ்டப்படுபவர்களுக்கே அளிக்கப்பட வேண்டும். பத்திரிக்கைகள் போலிகளின் கருத்தை பெரிதுபடுத்தாமல் உண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏற்கனவே மக்கள் குழம்பி போய் உள்ளனர். அவர்களை மேலும் குழப்ப வேண்டாம்.
வன்முறைக்கு அஞ்சமாட்டேன்...
எனக்கு கராத்தே, சிலம்பாட்டம், குதிரையேற்றம் மட்டுமல்ல, துப்பாக்கி சுடவும் தெரியும். வன்முறைக்கு அஞ்சமாட்டேன். சென்னை சென்று இன்னும் 3 நாட்களில் தீர்க்கமான முடிவேடுப்பேன். எந்த முடிவு எடுத்தாலும் அது மக்களின் நன்மைக்காக மட்டுமே இருக்கும். ஆனால் எங்களை கூட்டணியில் சேர்க்காமல் தனிமைப்படுத்தினால் 12 தொகுதிகளிலும் நிற்போம் என்றார் கார்த்திக்.