மதுரையில் வாக்காளர்களுக்கு திமுக பணம்-போராட்டம்
மதுரை: மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் திமுகவினர் மீது தேர்தல் ஆணையம், நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரையில் திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் சீத்தாராமன் ஆகியோரிடம் அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் சமீபத்தில் மனு கொடுக்கப்பட்டது.
மேலும், திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் புகார் செய்யப்பட்டது. ஆனால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அதிமுகவினர் கூறுகிறார்கள்.
இதையடுத்து மதுரையில் திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரை மேலமாசி - வடக்கு மாசி வீதி சந்திப்பில் அதிமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மோகன், அதிமுக நகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜு, சிபிஐ மாநகர் மாவட்டச் செயலாளர் சரவணன், பார்வர்டு பிளாக் செயலாளர் பசும்பொன், பாமக நகர் மாவட்டச் செயலாளர் செந்தில் குமார், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக மாநகர் மாவட்டச் செயலாளர் பகவதி, மூவேந்தர் முன்னேற்றக் கழக செயலாளர் மணிகண்டன், தேசிய லீக் மாநிலச் செயலாளர் அபுதாஹீர், மதச்சார்பற்ற ஜனதாதள நிர்வாகி ராதாகிருஷ்ணன் உளப்ட பலர் கலந்து கொண்டனர்.