தமிழக காங். வேட்பாளர் பட்டியலும் தயார்!
டெல்லி: எல்லா பெரிய கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் ஒரு வழியாக காங்கிரசும் தனது வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டதாகத் தெரிகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் காங்கிரஸ் மொத்தம் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளில் நூற்றுக்கணக்கான காங்கிரசார் மனு செய்துள்ளனர்.
இந்த 16 இடங்களில் தங்களுக்கும் தங்களது கோஷ்டியைச் சேர்ந்தவர்களுக்கும் இடம் பிடிக்க காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் கடந்த ஒரு வாரமாக பெட்டி படுக்கையோடு டெல்லியிலேயே முகாமிட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர்களான வாசன், சிதம்பரம், இளங்கோவன், மாநிலத் தலைவரான தங்கபாலு ஆகியோர் தங்களுக்கும் தங்களது கோஷ்டியைச் சேர்ந்தவர்களுக்கும் சீட் கேட்டு சோனியாவை அவரது அரசியல் செயலாளர் அகமத் படேல் மூலம் நெருக்கி வருகின்றனர்.
பிரபு, மணிசங்கர் அய்யர், குமரி அனந்தன் போன்றவர்களுக்கு தங்களுக்கு மட்டுமாவது இடம் பிடிக்க முயல்பவர்களி்ல் முக்கியமானவர்கள்.
இந் நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சுதர்சனம் ஆகியோர் நேற்று டெல்லி சென்றனர்.
நேற்று இரவு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, தமிழகத்துக்கான தேர்தல் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத், மூத்த தலைவர் பிருதிவிராஜ் செளகான் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்கள் ஆகியோர் வேட்பாளர் தேர்வுக் கூட்டத்தை நடத்தினர். கிட்டத்தட்ட 6 மணி நேரம் நடந்த இக் கூட்டம் இன்று அதிகாலை 3 மணி வரை நீடித்தது.
அதில், அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. இந்தப் பட்டியல் சோனியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடக்கிறது. அதில் இந்த பட்டியல் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவர்.
இதையடுத்து இன்று இரவு முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
இந்த முதல் பட்டியலில் சிவகங்கைக்கு ப.சிதம்பரம், மயிலாடுதுறைக்கு மணிசங்கர் அய்யர், ஈரோட்டுக்கு இளங்கோவன் ஆகியோர் அறிவிக்கப்படலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இடமில்லையா..?: குமரி காங். போஸ்டரால் பரபரப்பு:
இதற்கிடையே காமராஜரின் மானம் காத்த கன்னியாகுமரியில், காங்கிரஸுக்கு இடமில்லையா என்று கேட்டு ஒட்டப்பட்ட போஸ்டரால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் திமுக, அதிமுக கூட்டணியில் வழக்கமாக கன்னியாகுமரி கூட்டணிக்கு கட்சிக்கே ஒதுக்கப்படும். இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெரும் கட்சி அல்லது கூட்டணி கட்சியே மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என்ற செண்டிமெண்ட் தொடர்கிறது.
தி்முக கூட்டணியில் கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிற்கு ஒதுக்காமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு அப்போது காங் நிர்வாகிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும் மத்தியில் காங் ஆட்சி வர வேண்டும் என்ற எண்ணத்தில் காங் நிர்வாகிகள் அன்று முழு விச்சில் களத்தில் இறங்கினர். மார்க்சிஸ்ட் வேட்பாளர் பெல்லர்மின் அதிகமாக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வரும் லோக்சபா தேர்தலை ஓட்டி தமிழகத்தில் கூட்டணி மாற்றம் ஏற்பட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு இத்தொகுதி ஓதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுகவிற்கு ஓதுக்கப்பட்டது. வேட்பாளராக ஹெலன் டேவிட்சன் அறிவிக்கப்பட்டார்.
இது காங் நிர்வாகிகள் மத்தியில் கடுமையான அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில், காங் தொண்டர்கள் சார்பில் மாவட்ட அளவில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில் கை சின்னம் சோனியா, காமராஜர் படம் இடம் பெற்றுள்ளது. நீங்கள் போட்டியிட்டு வென்ற உங்கள் மானம் காத்த கு்மரியில் காங்கிரஸ் கட்சிக்கு இடமில்லையோ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்களால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜக பட்டியலும் தயார்...
அதே போல தமிழக பாஜக முதல் கட்டமாக 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று அல்லது நாளை வெளியிடும் என்று தெரிகிறது.