வட சென்னை: 3வது முறையாக வெல்வாரா தா.பா?
தொழிலாளர்களின் வாக்குகள் அதிகம் நிரம்பிய தொகுதி வட சென்னை. திமுகவின் ஆதிக்கம் நிறைந்த கோட்டை இது. இருப்பினும் இங்கு காங்கிரஸ் இரண்டு முறை வென்றுள்ளது.
அந்த இரண்டு முறையும் வென்றவர் தா.பாண்டியன். அப்போது அவர் காங்கிரஸில் இருந்தார்.
முதலில் 1989ம் ஆண்டு அங்கு போட்டியிட்ட தா.பாண்டியன், திமுகவின் என்.வி.என்.சோமுவை வென்று எம்.பியானார்.
பின்னர் 1991ம் ஆண்டு நடந்த தேர்தலி்ல திமுவின் ஆலடி அருணாவை எதிர்த்து நின்று மோதி வென்றார்.
1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் தா.பாண்டியனும், என்.வி.என்.சோமுவும் சந்தித்தனர். ஆனால் இதில் வென்றவர் சோமு.
அதன் பின்னர் தா.பாண்டியன் வட சென்னையி்ல போட்டியிடவி்ல்லை. கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் வட சென்னைக்கு வந்துள்ளார் தா.பாண்டியன். இந்த முறை இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக.
அதிமுக கூட்டணி பலம், ஏற்கனவே இருமுறை இங்கு வெற்றி கண்ட அனுபவம், தொழிலாளர்களின் வாக்கு வங்கி என கூடுதல் பலத்துடன் களம் இறங்கியுள்ள தா.பாண்டியனுக்கு எதிராக நிற்பவர் திமுகவின் டி.கே.எஸ். இளங்கோவன்.
திராவிட இயக்கத்தின் தத்துவ மேதை என அழைக்கப்படும் டி.கே.சீனிவாசனின் புதல்வரான இளங்கோவன், தொகுதிக்குப் புதியவர். இது தா.பாண்டியனுக்கு கூடுதல் பலமாகும்.
தற்போதைய சூழ்நிலையில் தா.பாண்டியனின் கையே இங்கு ஓங்கியுள்ளது.
3வது முறை எம்.பி.யாகும் நோக்கில் 4வது முறையாக களம் இறங்கியுள்ள தா.பாண்டியனுக்கு வட சென்னை வாகை சூடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.