இலங்கை-மூழ்கடிக்கப்பட்ட துருக்கி 'அமில' கப்பல்
கொழும்பு: தூத்துக்குடியில் இருந்து கந்தக அமிலத்தை ஏற்றி கொண்டு சென்ற துருக்கி கப்பல் இலங்கை அருகே முழ்கடிக்கப்பட்டது.
தமிழக துறைமுக நகரமான தூத்துக்குடியில் இருந்து இம்மாதம் 2ம் தேதி ஆந்திராவின் காகினாடாவுக்கு துருக்கியை சேர்ந்த மொடாரி மேக்னர் கிரன்பா என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது.
இதில் அளவுக்கு மீறி கந்தக அமிலத்தை ஏற்றி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கப்பல் இலங்கையின் திரிகோணமலை அருகே வந்த போது கப்பலின் ஒரு பகுதியி்ல் லேசான விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதை அடைப்பதற்காக அந்த கப்பல் திரிகோணமலையில் கடந்த மூன்று நாட்களாக நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அதை அடைக்கும் முயற்சி தோல்வியடைந்துவிட்டது. அதே சமயத்தில் விரிசல் பெரிதாக கப்பல் கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கப்பல் திரிகோணமலை பகுதியில் கவிழ்ந்தால் பெரும் நாசம் ஏற்படும் என கருதிய இலங்கை அரசு அதை அங்கிருந்து கிழக்கே 180 கிமீ தொலைவுக்கு கொண்டு சென்று நடுக்கடலில் முழ்கடித்தது.
கப்பலிருந்த 19 ஊழியர்களை இலங்கை கப்பற்படை, திரிகோணமலை போலீசிடம் ஒப்படைத்துள்ளது. இலங்கை கடல் சூற்றுப்புற சூழல் பாதுகாப்பு துறை கப்பல் நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்துள்ளது.