ஜெவுக்காக பதவி 'தியாகம்' செய்த தமிழ்ச்செல்வன்
தேனி மாவட்டம் நாராயணத்தேவன் பட்டியைச் சேர்ந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர். தந்தை பெயர் தங்கவேல். தாயார் சரஸ்வதி. எம்.ஏ படித்துள்ளார் தங்க தமிழ்ச்செல்வன்.
தொழில் விவசாயம் - உப தொழில் 'அம்மா'வின் தீவிர விசுவாசி, சசிகலாவின் நம்பிக்கையைப் பெற்றவர்.
பாண்டியம்மாள் என்ற மனைவி, சாந்தி என்ற மகள், நிஷாந்த் என்ற மகன் உள்ளனர்.
தேனி மாவட்ட செயலாளராக இருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்.
2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலி்ல ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது ஜெயலலிதா மீது டான்சி ஊழல் வழக்கு நிலுவையில் இருந்ததால், ஜெயலலிதாவால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை.
பின்னர் அவர் தேர்தலில் நிற்க தடை நீங்கியதைத் தொடர்ந்து ஆண்டிப்பட்டியில் போட்டியிட முடிவு செய்தார். இதையடுத்து தங்க தமிழ்ச்செல்வன் தனது பதவியை ராஜினாமா செய்து 'அம்மா' போட்டியிட வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.
இதன் மூலம் ஜெயலலிதாவிடம் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதற்குப் பிரதியுபகாரமாக, 2002ம் ஆண்டு நடந்த ராஜ்யசபா தேர்தலில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு சீட் கொடுத்து அவரை எம்.பியாக்கினார் ஜெயலலிதா.
தற்போது தேனி தொகுதியில் போட்டியிடும் தங்கமான வாய்ப்பையும் தமிழ்ச்செல்வனுக்கு அளித்துள்ளார் ஜெயலலிதா.
தேனி தொகுதி முன்பு பெரியகுளம் என்ற பெயரில் இருந்தது. அத்தொகுதியில் எம்.பியாக இருந்தவர் டிடிவி தினகரன். ஆனால் தற்போது அவர் 'அம்மா'வின் இதயத்திலிருந்து இறக்கி விடப்பட்டு விட்டதால் தினகரனுக்கு மீண்டும் சீட் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.