ஐபிஎல்: லலித் மோடி மீது சிதம்பரம் பாய்ச்சல்
டெல்லி: பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனைகளை ஏற்று செயல்பட்டிருந்தால் ஐபிஎல் சீசன் 2 இந்தியாவிலே நடந்திருக்கும். ஆனால், லலித் மோடி மாநில முதல்வர்களுக்கு நெருக்கடி கொடுத்து தொடரை தென் ஆப்ரிக்காவுக்கு கொண்டு சென்றுவிட்டார் என உள்துறை அமைச்சர் சிதம்பரம் கடுமையாக கடிந்துள்ளார்.
இது குறித்து தனியார் டிவிக்கு சிதம்பரம் கொடுத்த பேட்டியில்,
ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்தியிருக்க முடியும். அதற்கான ஆலோசனைகளை வழங்கினோம். தொடரை இரண்டாக பிரித்து இந்தியாவில் நடத்தலாம். முதலில் லீக் போட்டிகளை நடத்திவிட்டு 3 அல்லது 4 வார இடைவேளைக்கு பின் அடுத்து அரையிறுதி, இறுதி போட்டிகளை வைத்துகொள்வோம் என கூறினோம்.
ஆனால், அதை ஐபிஎல் தலைவர் லலித் மோடி ஏற்றுக்கொள்ளவில்லை. ஐபிஎல் அமைப்பினர் அதிபுத்திசாலித்தனமாக நடப்பதாக நினைத்து கொண்டு, மாநில டிஜிபிக்களுக்கும், முதல்வர்களுக்கும் நெருக்கடி கொடுத்தனர். நெருக்கடி காரணமாக மாநில டிஜிபிக்கள் பாதுகாப்பு கொடுப்பது கடினம் என கைவிரித்துவிட்டனர்.
தேர்தல் சமயத்தில் இந்தியாவில் அதிக பாதுகாப்பு தேவைப்படும் ஒரே சமயத்தில் அரசியல், கிரிக்கெட் இரண்டு கூட்டத்துக்கும் முழு பாதுகாப்பு கொடுப்பது என்பது கடினமான ஒன்று தான். இதில் ரகசியம் காப்பதற்கு எதுவுமில்லை.
மோடி அளவுக்கு பெரிய ஆள் இல்லை...
எனக்கு எந்த ஈகோவும் கிடையாது. நான் லலித் மோடி அளவுக்கு பெரிய ஆள் கிடையாது. இந்த விஷயத்தில் பிரச்சினை என்னவென்றால், ஐபிஎல் அமைப்பினர் போலீசாரின் நிலைமையை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவில்லை என்பது தான்.
போட்டியை நடத்த தயார் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினாலும் குஜராத் டிஜிபி பாதுகாப்பு குறைபாடு இருப்பதால் அது கடினம் என்றே கூறியுள்ளார்.
ஐபிஎல் அமைப்பினரின் பிடிவாதம் காரணமாக தான் போட்டி தென் ஆப்ரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த தொடரை 2 சதவீத இந்திய ரசிகர்கள் மட்டுமே நேரடியாக தென் ஆப்ரிக்கா சென்று பார்க்க இருக்கிறார்கள். டிவியில் பார்க்கும் 98 சதவீத ரசிகர்களில் ஒருவனாக தான் நானும் இருக்கிறேன் என்றார் சிதம்பரம்.