டெல்லி-புதிய தேர்தல் ஆணையாளராக வி.எஸ். சம்பத்
டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையாளராக தமிழரான ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.எஸ்.சம்பத் நியமிக்கப்பட இருக்கிறார்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒரு தலைமை தேர்தல் ஆணையாளர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையாளர்கள் உள்ளனர். தற்போது தலைமை தேர்தல் ஆணையாளராக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த கோபாலசாமியின் பதவி காலம் வரும் 20ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து இரண்டு தேர்தல் ஆணையர்களில் ஒருவரான நவீன் சாவ்லா வரும் 21ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையாளராக பொறுப்பேற்க இருக்கிறார். இதையடுத்து காலியாகும் அவரது இடத்துக்கு தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி வி.எஸ்.சம்பத் நியமிக்கப்பட இருக்கிறார்.
ஆந்திர கேடரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சம்பத், தற்போது ஆந்திர மின்சாரத் துறைச் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். 59 வயதான சம்பத்தின் பெயரை ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி தான் சோனியாவிடம் பரிந்துரை செய்ததாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து நேற்று பிரதமர் இதற்கான ஆணையை வெளியிட்டுள்ளார்.
தமிழரான சம்பத் 1973ம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி முடித்து ஆந்திராவில் பணிபுரிய துவங்கினார். சம்பத் இன்னும் 6 ஆண்டுகள் தேர்தல் ஆணைய பணிகளை கவனிக்க இருக்கிறார். நவீன் சாவ்லாவை தொடர்ந்து அடுத்ததாக தலைமை தேர்தல் அதிகாரியாக இருக்கும் எஸ்ஒய் குரேஷி 2012ல் ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து 2012 முதல் 2014 வரை சம்பத் தலைமை தேர்தல் ஆணையாளராக பதவியேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.