தென் தமிழகத்தில் கன மழை-மேலும் 2 நாட்கள் தொடரும்
சென்னை: வங்க கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 48 மணிக்கு நேரத்தில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தை கோடை முழுமையாக ஆக்கிரமித்தருந்தது. இந் நிலையில், வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மக்களை நிம்மதி பெருமூச்சு விடச் செய்துள்ளது.
இலங்கை கடலோர பகுதிகளில் உருவாகியுள்ள இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் நல்ல வானிலை மாற்றத்தை உணர முடிகிறது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக தென் தமிழகத்தில் மழை விடாது பெய்து வருகிறது.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதனால் வறண்டிருந்த குற்றாலம் அருவியில் நீர் கொட்ட ஆரம்பித்துள்ளது.
திருச்செந்தூரில் 3 நாட்களாக கன மழை நீடிக்கிறது. மேலும் விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, கரூர், அரியலூர், கடலூர் ஆகிய இடங்களிலும் பலத்த மழை பெய்தது.
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகையில்,
அடுத்த 48 மணி நேரத்துக்கு தென் மாவட்டங்களிலும், தஞ்சை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும்.
திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் லேசாக மழை பெய்யும். சென்னையில் வானம் சில சமயங்களில் மேகமூட்டமாக இருக்கும். மழை பெய்யும் வாய்ப்பும் இருக்கிறது. இங்கு அதிகபட்சமாக சுமார் 35 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகும் என்றார்.
நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள பூதபாண்டி, நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு, கன்னியாகுமரியில், பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாகர்கோவில், தக்கலை, ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் கன மழை பெய்தது.
குழித்துறை, மயிலாடி, நாங்குனேரி, மணியாச்சி, பட்டுக்கோட்டை, திருச்செந்தூர், ராதாபுரம், கோவில்பட்டி, சாத்தான்குளம், போடிநாயக்கனூர், தென்காசி, ஓட்டப்பிடாரம் ஆகிய இடங்களிலும் நல்ல மழை பெய்தது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கோடை மழை பெய்து மக்களை குளிர்வித்து காப்பாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.