தட்ஸ்தமிழ் செய்தி எதிரொலி-வைகோ உடனடி நடவடிக்கை!
கரூர்: மதிமுகவில் கரூர் மாவட்ட பொறுப்புக்குழு மாற்றம் செய்யப்பட்டு புதிய பொறுப்புக்குழு நியமிக்ப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிறத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன், தட்ஸ்தமிழில், கரூரில் கடந்த ஒன்றரை வருடங்களாக மதிமுகவில் மாவட்டச் செயலாளரே இல்லாமல் கட்சி நடந்தப்பட்டு வருவதை சுட்டிக் காட்டியிருந்தோம்.
திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது உயிர் நீத்த கரூர் அருகே உள்ள நொச்சிப்பட்டி தண்டபாணியின் உடல் தகனம் செய்யப்பட்டபோது மதிமுக என்ற கட்சி உருவானது.
இதையடுத்து திமுகவில் இருந்த கரூரைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் வைகேவின் மேல் கொண்ட நேசம் காரணமாக மதிமுகவில் இணைந்தனர். இதனால் கரூர் மதிமுகவின் கோட்டையாக விளங்கியது.
வைகோவின் நெருங்கிய நண்பரான மொஞ்சனூர் இராமசாமியை மாவட்டச் செயலாளராக வைகோ நியமித்தார். அவர் பல வருடமாக கட்சி பணியாற்றினார்.
ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக அவர் அப் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். இதையடுத்து கரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய வைகோ 13 பேர் கொண்ட பொறுப்புக் குழு அமைத்தார்.
கட்சிக்கு மாவட்டச் செயலாளர் இல்லாததால் ஆர்பாட்டம், உண்ணாவிரதம், போராட்டம், போன்றவற்றிலும் பல முக்கிய விவகாரத்திலும் முடிவுகளை எடுக்க முடியாமல் நிர்வாகிகள் தவித்து வருகின்றனர்.
இதை நாங்கள் வைகோவிடமும் சொல்லியும் ஏதும் நடக்கவில்லை என பல நிர்வாகிகள் நம்மிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இது குறித்து நாம் செய்தி வெளியிட்டோம். இதையடுத்து கடந்த ஒன்றரை வருடங்களாக இல்லாமல் இப்போது கரூர் மாவட்டத்திற்கு புதிய பொறுப்புக் குழுவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
அதன் விவரம் பின் வருமாறு:
கரூர் மாவட்ட மதிமுக பொறுப்புக்குழு தலைவராக பரணி மணி நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்புக் குழு உறுப்பினர்களாக கட்டையன், சீனிவாச பெருமாள், பல்லவி ராஜா, ராணி மணி சேகர், குணசேகரன், முகமது இஸ்மாயில், தங்கவேல், நெரூர் பாண்டியன், பா.கி. தங்கராசு, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் நேரத்தில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதால் அம் மாவட்ட மதிமுகவினர் உற்சாகமாகியுள்ளனர்.