லண்டனில் தொடரும் தமிழர் போராட்டம்
லண்டன்: இலங்கையில் போர் நிறுத்தம் கோரி லண்டனில் கடந்த 10 நாட்களாக தமிழ் இளைஞர்கள் இருவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை விவகாரத்தில் இங்கிலாந்து அரசு தலையிடக் கோரி லண்டனில் தமிழர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 4 நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந் நிலையில் சிவதரசன் சிவகுமாரவேல் (21), பரமேஸ்வரன் சுப்பிரமணியன் (28) ஆகியோர் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இருவரும் தெற்கு லண்டனில் உள்ள மிட்சாம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.
இதையடுத்து லிபரல் டெமாக்ரட் கட்சியைச் சேர்ந்த எம்பியான சிமோன் ஹூக்ஸ் இந்த மாணவர்களை சந்தித்து உண்ணாவிரத்ததை கைவிடுமாறும், இலங்கைக்கு இங்கிலாந்து குழுவை அனுப்பி போரை நிறுத்த முயல்வதாகவும், மேலும் போராட்டக் குழுவினரை ஐ.நா, அமெரிக்கா, பிரசஸல்ஸ் ஆகிய இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.
இதையடுத்து சிவகுமாரவேல் மட்டும் தனது உணணாவிரதத்தை கைவிட்டார். ஆனாலும் நீரை மட்டுமே அருந்தினார்.
இன்று லண்டனின் மத்தியப் பகுதியில் உள்ள கிரீன் பார்க்கில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் பேரணியும் மேற்கொள்ள உள்ளனர். இதில் சிவகுமாரவேல் பேசவுள்ளார்.
தமிழர்கள் மேலும் ஒரு வாரம் நாடாளுமன்றப் பகுதியில் அமைதியான போராட்டம் நடத்த அனுமதிக்குமாறு லண்டன் போலிசாரிடமும் சிமோன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் பல கட்சிகளின் தலைவர்களையும் ஒருங்கிணைத்து வருகிறார்.