பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர்
அதிமுகவின் நீண்டகால விசுவாசிகளி்ல் ஒருவர் கே.கே.பாலசுப்பிரமணியன். இவர் இளம் வயதிலே கட்சி பொறுப்பில் சேர்ந்துவிட்ட இவர் 1986ல் மணிகண்டம் ஒன்றியக் குழு தலைவராக தேர்தலில் வெற்றி பெற்றார். இது தான் தேர்தலில் அவர் பெற்ற முதல் வெற்றி.
இதை தொடர்ந்து திருச்சி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர், புறநகர் மாவட்ட அதிமுக இணைச்செயலர் என இவரை பதவிகள் தேடி வந்தன. தொகுதியில் கடுமையாக உழைத்து மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயம் ஆனார்.
இவரது கடும் உழைப்பை கண்ட அதிமுக தலைமையகம் 2001 சட்டசபை தேர்தலுக்கு இவரை ஸ்ரீரங்கம் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கியது. அதில் வெற்றி பெற பாலசுப்பிரமணியத்துக்கு ஜெயலலிதா, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் பதவி அளித்தார்.
அடுத்த தேர்தலில் இவருக்கு ஏனோ வாய்ப்பு கிடைக்கவில்லை. இவருக்கு பதிலாக ஸ்ரீரங்கத்தில் பரஞ்ஜோதி களமிறக்கப்பட்டார். ஆனாலும், பொறுமையுடன் கட்சி பணிகளை பாலசுப்பிரமணியன் தொடர்ந்தார். இவரது பொறுமைக்கும், அமைதிக்கும் ஜெயலலிதா தற்போது பரிசளித்துள்ளார்.
முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த இவர் பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள நெப்போலியனுக்கு கடும் சவால் கொடுப்பார் என்பது அதிமுகவின் கணக்கு.
தற்போது திருச்சி புறநகர் மாவட்ட செயலாளராக இருக்கும் இவருக்கு அமுதா என்ற மனைவியும், கார்த்திக், கதிர்வேல் என்ற இரு மகன்களும், கவிதா என்ற மகளும் உள்ளனர். இவரது சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள கள்ளிக்குடி.