திமுகவில் நாங்கள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல-ராமதாஸ்
வேலூரில் நிருபர்களிடம் பேசிய அவர்,
தேர்தல் வெற்றிக்கு மக்கள் ஆதரவு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தோழமைக் கட்சிகளிடம் ஒருங்கிணைப்பும், தோழமையும். இதுதான் கூட்டணி தர்மம். இந்த கூட்டணி தர்மம் அதிமுகவில் இருக்கிறது. எல்லா கட்சிகளும் தோழமை உணர்வோடு இருக்கிறோம்.
ஆனால், திமுகவில் அத்தகைய கூட்டணி தர்மம் இல்லை. திமுக கூட்டணியில் நாங்கள் 3 தேர்தல்களை சந்தித்தோம். அப்போது நாங்கள் பட்ட கஷ்ட, நஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இப்போது காங்கிரசும், திமுகவும் பல இடங்களில் அடித்துக் கொள்கின்றன.
திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வேலை செய்ய மாட்டோம் என்று பல தொகுதிகளில் காங்கிரசார் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள். ஒரு தொகுதியில் திமுக வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் பகிரங்கமாக கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதுபோன்ற நிலை அதிமுக கூட்டணியில் இல்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இலங்கைத் தமிழர்களை திமுக அரசு கைவிட்டுவிட்டது என்ற கோஷம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுபோல காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும், இலங்கையில் இனப் படுகொலையை தடுக்க தவறியதுடன், போர் நிறுத்தம் ஏற்பட எதுவும் செய்யவில்லை என்று பெரும் கோஷம் எழுந்துள்ளது. இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
திமுக போன்ற கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் மேலோங்கியுள்ளது. மத்தியில் தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணி, தேசிய ஜனநாயக கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி என பல கூட்டணி அரசுகள் ஆட்சி நடத்தின. அந்த கூட்டணிகளில் எல்லாம் அங்கம் வகித்த திமுக, தமிழகத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.
அந்த வாய்ப்பை பயன்படுத்தி காவிரி பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை, நதிநீர் இணைப்பு போன்றவற்றுடன் மாநில உரிமைகளையும், நலன்களையும் நிலைநாட்டுவதற்கு திமுக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி, இந்த வாய்ப்பை பயன்படுத்தி எந்த ஒரு முக்கியமான பிரச்சனைக்கும் தீர்வு கண்டதாக கூற முடியுமா?
இந்த தேர்தலில் எங்களைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். செயலிழந்திருக்கும் திமுக ஆட்சியில் மின்சாரம், நாள்தோறும் நடைபெறும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஆகியவற்றை மக்களிடம் எடுத்துச்செல்வோம்.
பிரபாகரனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்று வைகோ கூறியுள்ள கருத்து ஏற்புடையது அல்ல என்று மார்க்சிஸ்ட் தலைவர் வரதராஜன் கூறியிருப்பது அவரது சொந்தக் கருத்து. இலங்கைத் தமிழர் பிரச்சனையால் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. உணர்ச்சிவசப்பட்டு வைகோ பேசியிருக்கிறார். அப்பாவித் இலங்கைத் தமிழர்கள் மீது ரசாயண ஆயுதங்களை இலங்கை ராணுவம் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
ஆனால், இலங்கை பிரச்சினையில் நாளுக்கொரு செயல், பொழுதுக்கொரு பேச்சு என்று செயல்பட்டு வருபவர் கருணாநிதி.
மாநிலத்தின் உரிமைகளை பறிகொடுத்து விட்டு மக்களிடம் இலவசங்களை காட்டி கருணாநிதி ஏமாற்ற முயற்சிக்கிறார்.
அரசியலில் மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்லை எல்லா கட்சியினரும் மந்திரமாக கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாமக மட்டும் கூட்டணி மாறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் இது தொடர்பாக பாமகவை விமர்சித்திருக்கிறார். அவர் அணி மாறாதவரா? புதிய கட்சி தொடங்காதவரா? அவரது கட்சி அணி மாறாததா? என்று கேட்டார் ராமதாஸ்.