நார்வே இலங்கை தூதரகம் மீது தமிழர்கள் தாக்குதல்
இலங்கையில் போர் நிறுத்தம் கோரி ஐரோப்பிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா என உலரம் முழுவகும் தமிழர்கள் கடந்த ஒருவார காலமாக போராட்டங்கள், பேரணிகள் நடத்தி வருகின்றனர்.
ஓஸ்லோவிலும் கடந்த 5 நாட்களாக இலங்கை தூதரகம் முன் தமிழர்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காலை இலங்கை பாதுகாப்பு வளையத்துக்குள் அந் நாட்டு ராணுவம் 300 கிரனைட்களை வீசி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய செய்தி வெளியானதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் கொதிப்படைந்தனர்.
பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாரை தள்ளிவிட்டுவிட்டு இலங்கை தூதரகத்துக்குள் நுழைந்த அவர்கள் ஜன்னல்கள் மற்றும் மேஜைகள், நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். அவர்களை போலீசார் உடனடியாக வெளியேற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 500 பேர் பங்கேற்றனர். இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
மன்னிப்பு கோரிய நார்வே:
தூதரகம் மீது நடந்த இந்தத் தாக்குதலுக்கு இலங்கையிடம் நார்வே மன்னிப்பு கோரியுள்ளது.
இலங்கையில் நார்வேயின் முயற்சியால் 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை போர் நிறுத்தம் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் போராட்டம்:
இந் நிலையில் இலங்கை தமிழர்களை காப்பாற்ற கோரியும், உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் ஆஸ்திரேலியாவில் சுமார் ஆயிரம் தமிழர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் பாராமட்டா பகுதியில் மூன்று தமிழர்களுடன் துவங்கிய போராட்டம் ஒன்று தற்போது பல்கி, பெருகி ஆயிரம் பேரை கொண்ட உண்ணாவிரத அறப்போராட்டமாக மாறியுள்ளது.
இதில் குழந்தைகள், பெண்கள் என தமிழர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய பிரதமரின் இல்லமான கிரிபிலி முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக தெரிவித்துள்ளனர். இவர்களை சுமார் 30க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணித்து வருகின்றனர்.