மும்பை தாக்குதல் விசாரணை ஆரம்பம்-கோர்ட்டில் கஸாப்
மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கின் விசாரணை இன்று தொடங்கியது. ஆர்தர் சாலை சிறை வளாகத்தில் தொடங்கிய இந்த விசாரணையையொட்டி தீவிரவாதி முகம்மது அஜ்மல் கஸாப் ஆஜர்படுத்தப்பட்டான்.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு இன்று முதல் ஆர்தர் சாலை சிறையில் உள்ள தனி நீதிமன்றத்தி்ல விசாரணைக்கு வந்துள்ளது.
இதற்காக இன்று கஸாப்பை தனி நீதிபதி தஹிளியானி முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர்.
விசாரணையையொட்டி ஆர்தர் சாலை சிறைச்சாலைக்குள்ளும், வெளியிலும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1500 போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிறையைச் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
சிறைக்கு அருகே வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.
வெடிகுண்டே போடப்பட்டாலும் கூட சேதமடையாத அளவுக்கு கஸாப் உள்ள சிறைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கஸாப்பை சிறை அறையிலிருந்து கோர்ட்டுக்குக் கொண்டு செல்வதற்காக 20 அடி நீளமுடைய குண்டுகளால் துளைக்க முடியாத தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
சிறைக்கு வெளியே இந்திய -திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் உள்ளூர் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கஸாபை பார்க்க வரும் தாயார்..:
இதற்கிடையே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனைப் பார்ப்பதற்கு கஸாப்பின் தாயார் வருகிறார்.
இதுகுறித்து மேற்கு வங்க மாநிலம் ஜாங்கிபூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், மும்பை தாக்குதலில் ஈடுபட்டு கைதாகி சிறையில் உள்ள கஸாப்பின் தாயார், தனது மகனைப் பார்ப்பதற்காக மும்பைக்கு வருகிறார்.
இந்த வழக்கில், பாகிஸ்தான் இனியும் தாமதம் செய்யாமல், மேலும் மேலும் விளக்கம் கேட்டுக் கொண்டிராமல், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்றார் முகர்ஜி.
கஸாப்பின் வக்கீல் அஞ்சலி நீக்கம்:
இந் நிலையில் தொழில் தர்மத்தை மீறும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி கஸாப்புக்கு ஆதரவாக வாதாட நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அஞ்சலி வாக்மரேயை, தனி நீதிமன்றம் நீக்கி விட்டது.
கஸாப்புக்காரக வாதாட மும்பை தனி கோர்ட் நியமித்த வக்கீல்தான் அஞ்சலி. கஸாப்புக்காக வாதாடக் கூடாது என சிவசேனா கட்சி போராட்டம் நடத்தியது. இதையடுத்து தான் வாபஸ் பெறுவதாக முதலில் கூறினார் அஞ்சலி. ஆனால் பின்னர் அந்த முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டு, கஸாப்புக்காக ஆஜராவேன் என்று உறுதிபடத் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் அஞ்சலியை தனி கோர்ட் நீக்கி விட்டது. அவர் தொழில் தர்மத்தை மீறும் வகையில் நடந்து கொண்டதாக கோர்ட் கூறியுள்ளது.
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் சிக்கி காயமடைந்த ஒருவருக்காக தற்போது ஆஜராகி வருகிறார் அஞ்சலி. அப்படி இருக்கையில், கஸாப்புக்காக அவர் வாதாடுவது தார்மீக நெறிகளுக்கு புறம்பானது, தொழில் தர்மத்தை மீறும் செயல் என கோர்ட் கூறியுள்ளது.