கருத்தரங்கில் ஸ்ரீராம் சேனா தொண்டர்கள் ரகளை
டெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்ட டெல்லி கருத்தரங்கில் ஸ்ரீராம் சேனா தொண்டர்கள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர்.
டெல்லியில் உள்ள ஐஐசி கட்டடத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் நடைபெற்றது.
அப்போது பாகிஸ்தானின் தி நியூஸ் செய்தியாளர் கான் யூசுபாய் என்பவர், மீடியா செய்திகளால் இந்தியா, பாகிஸ்தான் நல்லுறவு கெடுகிறதா என்ற தலைப்பில் பேசினார்.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்திய மீடியாக்கள் செய்தி வெளியிட்ட விதத்தை அவர் குறை கூறிப் பேசினார்.
இதையடுத்து பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த 10 பேர் (ஸ்ரீராம் சேனா அமைப்பினர் என பின்னர் தெரிய வந்தது) எழுந்து பாகிஸ்தான் ஒழிக என கோஷமிட்டனர். மேலும், உடனடியாக இந்த கருத்தரங்கை நிறுத்த வேண்டும் எனவும் கோரினர்.
இதையடுத்து அங்கு போலீஸார் உள்ளே புகுந்தனர். போராட்டத்தில் குதித்தவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக வைக்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் போகாமல் பாகிஸ்தானையும், பாகிஸ்தான் மீடியாக்களையும் எதிர்த்து கோஷமிட்டு ரகளை செய்தனர்.
பின்னர் போலீஸார் அவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றினர். அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பின்னர் கருத்தரங்கம் தொடர்ந்து நடந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications