ஈழம்-தேர்தலைப் புறக்கணிக்க நினைத்தேன்: திருமா

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி விருது வழங்கும் விழா மயிலாப்பூர் மாங்கொல்லையில் நேற்று இரவு நடந்தது.
கவிஞர் அறிவுநிதி, சுப.வீரபாண்டியன், தமிழருவி மணியன், குணங்குடி அனிபா, தாமரை பெருஞ்சித்திரனார் போன்றவர்களின் சமுதாய பணிகளை பாராட்டி அவர்களுக்கு திருமாவளவன் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், சூது, சூழ்ச்சி, வஞ்சகம் நிறைந்த தேர்தல் அரசியல்களத்தில் என்னால் தாக்கு பிடிக்க முடியவில்லை. மனச்சோர்வின் விளிம்புக்கே சென்று திரும்புகிறேன்.
இலங்கையில் தமிழ் மக்கள் முழுவதும் அழிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டுமா? இலங்கையில் நம் இனமே அழிக்கப்பட்டால் பாராளுமன்றத்துக்கு போய் என்ன செய்ய போகிறோம் என்றெல்லாம் மனப்போராட்டம் நடந்தது.
எனவேதான் கடந்த 8-ந் தேதி ஒரு முடிவு எடுத்தேன். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அளிக்கப்பட்ட 2 தொகுதிகளையும் தி.மு.க.விடம் ஒப்படைத்து விட்டு தேர்தலில் இருந்து ஒதுங்கி விடலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் ரவிக்குமார் போன்ற நிர்வாகிகள் அவசரப்பட வேண்டாம் என கூறி என் மனதை மாற்றி விட்டனர்.
தமிழக அரசியல் வரலாற்றில் ஆளும் கட்சி இடம் பெற்றுள்ள மிகப்பெரிய கூட்டணியில் ஒரு தலித் அமைப்புக்கு 2 பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டு இருப்பது இது தான் முதல்முறை.
2 தொகுதியிலும் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதால் தலித் மக்களுக்கு கிடைக்க கூடிய இந்த பிரதிநிதித்துவத்தை குலைத்து விடக்கூடாது என்பதால் முடிவை மாற்றிக்கொண்டேன்.
இலங்கை தமிழர்களுக்காக பல போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் இணைந்தோம். என்பதற்காக, இலங்கை தமிழினத்துக்கு துரோகம் செய்ததாக பிரசாரம் செய்கின்றனர்.
திருமாவளவனுக்கு, தா.பாண்டியன் போன்றவர்களின் சான்றிதழ் தேவையில்லை. நான் போராளியா? இல்லையா? என்பது பிரபாகரனுக்குத் தெரியும்.
அவர்கள் இணைந்த கூட்டணியில் நாம் இணையவில்லை என்கிற காழ்ப்புணர்ச்சியில் இலங்கை தமிழர்களுக்கு நாம் துரோகம் செய்து விட்டதாக களங்கம் கற்பிக்க முயல்கின்றனர்.
எந்த அரசியல் அணியில் இருந்தாலும் எத்தகைய தேர்தல் களத்தில் இருந்தாலும் இலங்கை தமிழர்களுக்காக போராட்டம் நடத்த தயங்க மாட்டோம் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications