சென்னை-தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 5 பேர் பலி
சென்னை: சென்னை அருகே கும்மிடிப்பூண்டி தொழிற்சாலையில் பாய்லர் திடீரென வெடித்ததில் ஐந்து தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் துல்சியான் என்ற இரும்புக் கம்பி தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது.
அங்கு பீகார், உ.பியைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள் நேற்று இரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரும்புக் கழிவுகள், துகள்கள் ஆகியவற்றை பிரமாண்ட பாய்லரில் கொட்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பாய்லர் பலத்த சப்தத்துடன் வெடித்தது. அதில், இருந்த இரும்புக் குழம்பு அப்படியே வெளியே சிதறியது. இதில், சங்கர் (45), திரிபாதி (35), கரீபன் (40), வீரேந்தர் ராஜ் (35), உமேஷ் (30, மிதுன் (21), கிருஷ்ணன் (25) ஆகிய 7 பேரும் உடல் கருகினர்.
உடனடியாக அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சங்கர், திரிபாதியும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, வீரேந்தர்ராஜ், மிதுன், கரீபன் ஆகிய 3 பேரும் இறந்தனர்.
மற்ற இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாய்லரில் கொட்டப்பட்ட இரும்புத் துகள்களில்,
வெடிக்காத ராக்கெட் குண்டுகள் இருந்ததாக தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது வெடித்ததால்தான் பாய்லர் வெடித்து இரும்புக் குழம்பு கொட்டியுள்ளது.
இந்த விபத்தால் தொழிற்சாலையிலும் தீ பரவியது. இருப்பினும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்து பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்தனர்.












Click it and Unblock the Notifications