''நான் சொல்லவில்லை-என் அன்பு சகோதரி சொன்னார்''
கள்ளக்குறிச்சி: இலவசங்களை காட்டி இனியும் திமுகவால் மக்களை ஏமாற்ற முடியாது, மக்கள் தெளிவான தீர்ப்பு வழங்குவார்கள் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
கள்ளக்குறிச்சி பாமக வேட்பாளர் தன்ராஜை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் நிருபர்களிடம் பேசுகையி்ல்,
மக்கள் சக்தி முழுமையாக எங்கள் கூட்டணிக்கு உள்ளதால் நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். இது ஹேஸ்யமோ, ஜோதிடமோ அல்ல. மக்களின் மனநிலையை அறிந்து சொல்கிறேன்.
தேர்தலுக்கு பிறகு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று நான் பேசியதற்கு திமுக ஆட்சியை காங்கிரஸ் கவிழ்க்காது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியிருக்கிறார்.
திமுக ஆட்சியை காங்கிரசார் கவிழ்ப்பார்கள் என்று நான் சொல்லவே இல்லையே. ஆனால் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல அவர் பதில் சொல்லியிருக்கிறார்.
ஆனால் நிச்சயமாக தேர்தலுக்கு பிறகு 3 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும். அது எப்படி நடைபெறும் என்பதையெல்லாம் நீங்கள் பின்னால் தெரிந்து கொள்வீர்கள்.
விழுப்புரம் மாவட்டத்தை 2 ஆக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைப்பதற்கான எல்லா முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம். வெற்றி பெறப் போகிற நாடாளுமன்ற உறுப்பினர் இந்த முயற்சியை எடுப்பார்.
பின்னர் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தந்த பதில்கள்:
கேள்வி: திருமங்கலம் இடைத்தேர்தல் போல இந்தத் தேர்தலிலும் பணத்தை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என திமுகவினர் கருதுவதாக குற்றச்சாட்டு சொல்கிறார்களே?
ராமதாஸ்: இதை நான் சொல்லவில்லை என் அன்பு சகோதரிதான் சொன்னார். ஆனால் எத்தனை கோடி செலவு செய்தாலும் இந்த தேர்தலில் மக்கள் தெளிவாக நல்ல தீர்ப்பை வழங்குவார்கள். இலவசங்களை காட்டி மக்களை ஏமாற்ற முடியாது.
கேள்வி: தனி ஈழம் விஷயத்தில் அதிமுகவுக்கும் பாமகவுக்கும் முரண்பாடு உள்ளதே?
ராமதாஸ்: ஒவ்வொரு கட்சிக்கு ஒவ்வொரு நிலைபாடு உள்ளது. எங்கள் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்லி வருகிறேம் என்றார்.












Click it and Unblock the Notifications