புலிகளின் 3 நாள் தாக்குதலில் 500 ராணுவத்தினர் பலி
புதுக்குடியிருப்பு: முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மார்க்கத்தில் உள்ள இரட்டை வாய்க்கால் சந்திப்புப் பகுதியைக் கைப்பற்ற முயன்ற ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே அங்கு 3 நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல்களில் 600க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திகள்..
புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு வீதியில் உள்ள இரட்டைவாய்க்கால் சந்தியை கைப்பற்றும் நோக்கில் இலங்கைப் படையினர் கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்ட தாக்குதல்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களாக - விடுதலைப் புலிகளின் முன்னரண்களை கைப்பற்றி இரட்டைவாய்க்கால் சந்திக்குள் நுழைய சிறிலங்காப் படையினர் மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
பீரங்கிகள், கனரக சுடுகலன்களின் தாக்குதல்கள் ஆகியவற்றை பக்க பலமாகக்கொண்டு முன்னேற முனையும் சிறிலங்கா படையினரை எதிர்கொண்டு, தொடர்ச்சியான எதிர்த்தாக்குதலில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சண்டையில், இதுவரை 500 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தெரிகிறது.
காயமடைந்த ராணுவத்தினரில் பலருக்கு கை, கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.